நடிகை கஸ்தூரிக்கு எதிராக மீண்டும் போலீசில் புகார்.. கைது செய்யப்பட வாய்ப்பு?
சென்னை: சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு பேசும் மக்களை நடிகை கஸ்தூரி அவதூறாகப் பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு இடங்களில் கஸ்தூரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகை கஸ்தூரி கடந்த நவம்பர் 3 ஆம் தேதி சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகில் பிராமணர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவர் அவதூறாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

இதையடுத்து நடிகை கஸ்தூரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் முன்னேற்றபடை தலைவர் வீரலட்சுமி உட்பட பல்வேறு தரப்பினர் தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இவ்வாறு பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் வந்ததையடுத்து நடிகை கஸ்தூரி சமுகவலை தளம் மூலமாக வருத்தம் தெரிவித்திருந்தார்.
நடிகை கஸ்தூரி தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தி பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பார்த்ததாகவும், கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கும் வேண்டுமென அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அமைப்பினர் எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்திருந்தனர்.
இந்த புகாரின் அடிப்பிடையில், எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மதம், இனம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் தவறான வதந்திகளை பரப்புவது மொழி, பிராந்திய குழுக்கள் இடையே பகை உணர்வு ஏற்படும் வகையிலும், கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசுவது, உள்ளிட்ட 192, 196(1)(a), 353(1)(b) and 353(2) BNS ஆகிய 4 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலிபுரம் காவல் நிலையத்தில் அகில இந்திய போயர் மகளிர் முன்னேற்ற கழகம் சார்பில் விஜயலட்சுமி என்பவர் புகார் தெரிவித்துள்ளார். தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு பேசிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா என்பவர் தலைமையில், சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தமிழக நாயுடு மகாஜன சங்கம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் ரமேஷ் மற்றும் போஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் நடிகை கஸ்தூரி மீது புகார் அளித்துள்ளனர். தமிழக மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் எண்ணத்தில் செயல்பட்ட நடிகை கஸ்தூரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என தங்கள் புகாரில் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு பேசும் மக்களை நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்க தலைவர் பிரபாகரன், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications