காவல்துறை மானிய கோரிக்கை.. முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக வீடியோ.. மற்றொரு போலீஸ்காரரும் சஸ்பெண்ட்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் பற்றியும், சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சனம் செய்தும், அவதூறு பரப்பும் வகையிலும் வீடியோ பதிவிட்டதாக தற்போது இன்னொரு போலீஸ்காரர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் மொத்தம் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து சட்டசபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். இந்நிலையில் சட்டசபையின் இறுதி நாளான நேற்று காவல்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடந்தது.

இந்த விவாதத்துக்கு முதல்வர் பதிலளித்து பேசினார். ஆருத்ரா நிதி நிறுவன மோசடி, வேங்கைவயல் விவகாரம், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய ஏஎஸ்பி பல்வீர்சிங் பிரச்சனை உள்ளிட்ட வெவ்வேறு விவகாரங்கள் குறித்தும், அதன்மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை பற்றியும் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்தார்.
மேலும் 2023-24ஆம் நிதியாண்டிற்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். மொத்தம் 101 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அப்போது மாநில உளவுத்துறையில் 383 பேருடன் பயங்கரவாத எதிர்ப்பு படை உருவாக்கப்படும். பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் 4,500 ரூபாய் சீருடைப்படி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை மாநகரில் 2,000 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும்.
ஒருங்கிணைந்த வாகன சோதனை மையங்களில் சென்னை மாநகர காவல்துறைக்காக நவீன உபகரணங்கள் வாங்கப்படும். சென்னை வானகரம், தாம்பரத்தில் மேடவாக்கம், ஆவடியில் புதூர் ஆகிய இடங்களில் ரூ.25.44 கோடி செலவில் நியூ மெட்ரோ பாலிட்டன் போலீஸ் நிலையம் அமைக்கப்படும் என முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் மீம் மற்றும் வீடியோ வெளியிட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக போலீஸ்காரர்களே இதனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தேனாம்பேட்டை ஏட்டு பாலமுருகன் வலைதளத்தில் மீம், வீடியோ வெளியிட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த உத்தரவை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்தார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது இன்னொரு போலீஸ்காரரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதாவது கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் கோபி கண்ணன். இவர் போரூர் காவல் நிலையத்தில் முதன்மை காவலராக பணியாற்றி வந்தார். இவரும் தனது பேஸ்புக்கில் முதல்வர் ஸ்டாலின் குறித்தும், காவல்துறை மானியக்கோரிக்கையை விமர்சித்தும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து கோபிகிருஷ்ணனும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த உத்தரவை ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பிறப்பித்தார். தமிழ்நாடு முதல்வரின் காவல்துறை மானிய கோரிக்கையின் அறிவிப்புகளை விமர்சனம் செய்த 2 காவலர்கள் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications