எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரூ.25 லட்சம் பறிமுதல்..அதிமுக்கிய ஆவணங்களும் சிக்கின..பரபரப்பு தகவல்கள்
சென்னை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறியுள்ளனர். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.
Recommended Video
இந்த நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான சொந்தமான இடங்கள், வீடு, ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகம், தொழில் நிறுவனங்கள் என 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை போலீஸார் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அதிரடி சோதனை
வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் வாங்கிக் குவித்ததாக இந்த சோதனை நடைபெறுகிறது என்று லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் தெரிவித்தனர். சுமார் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி பவானீஸ்வரி தலைமையில், 20 குழுக்களாகப் பிரிந்து காலை 7 மணி முதல் அதிரடி சோதனை தொடங்கியது. 2 போலீஸ் இன்ஸபெக்டர்கள் உள்பட மொத்தம் 22 பேர் இந்த சோதனையில் பங்கேற்றனர்.

அதிமுகவினர் வாக்குவாதம்
கரூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 20 இடங்களில் சோதனை நடந்தது. எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றபோது, அந்த இடங்களுக்கு முன்பு திரண்ட அதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சில இடங்களில் அதிகாரிகளை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். இதேபோல் இந்த சோதனையை கண்டித்து பல்வேறு இடங்களிலும் அதிமுகவினர் போராட்டம் நடத்தினார்கள்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி, அரசியல் காழ்புணர்ச்சியாக வேண்டுமென்றே எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவரான அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பாஜகவும் குற்றம் சாட்டியது.

ரூ.25 லட்சம் பறிமுதல்
இந்த நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான சொந்தமான இடங்களில் சுமார் 13 மணி நேரம் நடைபெற்ற சோதனை இன்று மாலை நிறைவு பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறியுள்ளனர். மேலும் சோதனை நடைபெற்ற இடங்களில் இருந்து சொத்து ஆவணங்கள், பண பரிவர்த்தனை ஆவணங்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications