இன்று ஊழல் எதிர்ப்பு; அன்று ஊழல் வழக்கில் சிறை சென்ற ஜெ.வுக்கு ஆதரவு! விஜய் இரட்டை நிலைப்பாடு?
சென்னை: திமுக ஊழல் கட்சி என வெளிப்படையாகப் பேசிய நடிகர் விஜய், அதிமுக முன்னாள் முதல்வர் ஊழல் புகாரில் சிறை சென்று வந்த பிறகு மீண்டு ஆட்சி அமைப்பதற்காக ஏன் ஆதரவு கொடுத்தார் என சமூக ஊடகங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை 27 ஆம் தேதி நடக்கப்போகும் மாநாட்டில் அறிவிப்பேன் என்று விஜய் கடந்த மாதம் சொன்னபோது பலரும் அது என்னவாக இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், கடந்த ஞாயிற்றுக் கிழமை விஜய் விக்கிரவாண்டியில் பேசிய பேச்சைக் கேட்டபோது அதில் முக்கால்வாசி பேர் ஏமாந்து போய் இருப்பார்கள்.

கட்சியின் கொள்கை என விஜய் படிக்கச் சொன்ன முழக்கங்களில் புதியதாக ஒன்றுமே இல்லை. அது கிட்டத்தட்டத் திராவிட இயக்க அரசியலில் மூத்த கட்சியான திமுக பல ஆண்டுகளாகப் பேசிவருபவைதான். கொள்கையில் புதியதாக எதையும் முன்வைக்க முடியாததால்தான் அவர், 'பேச்சு அரசியல் செய்ய மாட்டோம். செயல்' என்று சொல்லி இருக்கிறார். ஒருவர் தலைவர் செயல்பட வேண்டும் என்றால் முதலில் சிந்திக்க வேண்டும். பின்னர் அதை மக்களிடம் சொல்லிப் புரியவைத்து ஆதரவு திரட்டவேண்டும். எதையுமே பேசாமல் எப்படி ஒரு செயலை செய்ய முடியும்? என்ற வாதத்தைப் பலரும் வைத்து வருகின்றனர்.
ஒரு திரைப்படம் போல விஜய் மாநாட்டில் பேசிய பேச்சை எதிர்க்கட்சியினர்கூட வரவேற்கிறார்கள். அதற்குள் திமுக எதிர்ப்பு மட்டுமே நேரடியாக இருந்தது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஊழல் ஆட்சி பற்றி விஜய் பேசுவது புதிய விசயம் அல்ல. அவர் இதற்கு முன்பாக அன்னா ஹசாரே காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஜன்லோக் பால் மசோதாவை நிறைவேற்றவேண்டும் என ஊழலுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய போதே அவரை நேரில் சென்று வாழ்த்திவிட்டு வந்தவர்தான். ஆனால், அதன்பின்னர் ஊழலுக்கு எதிராக அவர் எடுத்த போராட்டங்கள் என்ன? செய்த செயல்கள் என்ன? ஒன்றுமே இல்லை என்று வாதிடுகிறார்கள் ஆளும் கட்சியை சேர்ந்த உடன்பிறப்புகள்.
அதேபோல் அதிமுக ஊழலே செய்யவில்லையா? ஊழல் புகாரில் சிறைக்குச் சென்றவர் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. அவர் சட்டரீதியாக ஊழல் குற்றத்திற்காகத் தண்டனைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கத் தேர்தலைச் சந்தித்த போது, விஜய்யும் அவரது தந்தை சந்திரசேகரும் சேர்ந்து அதிமுகவுக்கு நேரடியாக ஆதரவு கொடுத்தார்கள். விஜய் போயஸ் கார்டன் வீட்டுக்குப் போய் ஜெயலலிதாவைச் சந்தித்தார். ஊழலை எதிர்ப்பவர் எப்படி அன்று ஊழல் புகாரில் சிறை சென்றவரை ஆதரித்தார் என்று இடதுசாரி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
அதாவது அதிமுக செய்தால் அது ஊழல் அல்ல. திமுக செய்வது மட்டுமே ஊழல் என்று புதியதாக அரசியல் களத்திற்கு வந்து விஜய் பேசக்கூடாது. நேரடியாக அவர் இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாகத் தன்னை முன்வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் தரப்பு எதிர்பார்க்கிறது. விஜய்யின் மாநாட்டுப் பேச்சு உணர்த்துவது என்ன? அது பற்றி மார்க்சிஸ்ட் அருணன், "இன்னொரு எடப்பாடி பழனிசாமி உருவாகி இருக்கிறார் என்றுதான் சொல்வேன். இன்னொரு அதிமுக உருவாகப் பார்க்கிறது என்றும் சொல்லலாம். அதிமுகவினர் பெரியாரை ஏற்பார்கள். அண்ணாதுரையைப் புகழ்வார்கள். திமுகவைத் தாக்குவார்கள். விஜய் இரண்டு எதிரிகளைச் சொல்கிறார். ஒன்று பிளவுவாத சக்திகள். அதை பாஜக என்று பெயர் சொல்லவில்லை. மற்றொன்று அரசியல் எதிரி திராவிட மாடல். அதை நேரடியாகச் சொல்கிறார்.
முதலில் மதவாத, பிளவுவாத அரசியலைக் கொள்கை எதிரி என்றவர், இறுதியில் 'அவர்கள் பாசிசம்னா நீங்கள் என்ன பாயாசமா?' என்று பாஜகவை ஆதரிக்கிறார். இவர் முதலில் கட்சி தொடங்குவதாக அறிவித்த போது அவர் திமுக எதிர்ப்புக்குத்தான் வருவார் என நினைத்தேன். அப்படியே நடந்துள்ளது. அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சொன்னதே அதற்குத்தான். பாஜக எதிர்ப்பு என விஜய் சொல்வது மேம்போக்காகத்தான். இறுதியில் அவர் திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கே வருவார். அவர் அதிமுகவின் வாக்குகளை தன்பக்கம் இழுக்கப் பார்க்கிறார்" என்கிறார்.












Click it and Unblock the Notifications