பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் மர்மமாக மறையும் 'ஆட்சி எதிர்ப்பு அலை'.. திமுக வைக்கும் வாதம்
சென்னை: இந்திய அரசியலில் தற்போது ஒரு விசித்திரமான போக்கு நிலவுவதாக திமுக நம்புகிறது. எப்படி என்றால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மிகச்சிறிய குறைகள் கூட பூதாகரமாக்கப்பட்டு 'ஆட்சிக்கு எதிரான அலை' ன்ற பிம்பம் கட்டமைக்கப்படுவதாகவும், பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் ஆட்சி எதிர்ப்பு அலை வருவது இல்லையே .. அது எப்படி என்று திமுக கேள்வி எழுப்புகிறது.. எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும் என்று முதல் மரியாதை படத்தில் வருவது போல் கேள்வி எழுப்பி உள்ள திமுக, 'புரியாத புதிர்' என்று வலுவான விமர்சனத்தை முன் வைத்துள்ளது.
இது பற்றி திமுக ஆதரவாளர்கள் கூறிய கருத்துக்களின் படி, இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை உற்று நோக்கினால், பாஜக ஆளும் வட மாநிலங்களில் ஆட்சிக்கு எதிரான மனநிலை என்பது தேர்தல் முடிவுகளில் எதிரொலிப்பதே இல்லை என்ற தோற்றம் இருப்பதை நீங்கள் காண முடியும். கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் சுமார் 30 ஆண்டுகளாக அங்கு பாஜகவின் ஆட்சி தொடர்கிறது. கால் நூற்றாண்டு கடந்தும் அங்கு ஆட்சி எதிர்ப்பு அலை என்பது எழவே இல்லை என்பது நம்பும்படியாக இல்லை.

மத்திய பிரதேசம்
அதேபோல் மத்திய பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில், ஒரு குறுகிய காலத்தைத் தவிர்த்து, பாஜக தொடர்ந்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து வருகிறது. சமீபத்திய தேர்தலிலும் அங்கு ஆட்சி எதிர்ப்பு அலையே வீசியது. ஆனாலும் அதனையும் மீறி பாஜக அங்கு பெரும் வெற்றி பெற்றது.
அசாம் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் ஒருமுறை வெற்றி பெற்ற கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது கடினம் என்ற வரலாற்றுச் சுவடுகளை அழித்து, பாஜக இரண்டாம் முறையாகத் தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது.
பீகார்
பீகாரிலும் பல ஆண்டுகளாக நிதீஷ்குமார் தான் முதல்வராக இருக்கிறார். அங்கு அதிருப்தியே வருவது இல்லையே.. ஒரு மாநிலத்தில் ஒரு முறை பாஜக ஜெயித்த பின்னர் அங்கு எதிர்ப்பு அலையே இல்லையே என்பது போல் மாயை உருவாக்கப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் ஆட்சி மாற்றம் அடுத்தடுத்து நிகழ்கிறது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம்
உதாரணத்திற்கு டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி, எதிர்ப்பு அலையால் காலியானது. அதேபோல் பஞ்சாப்பில் எதிர்ப்பு அலையால் காங்கிரஸ் ஆட்சி காலியானது. அடுத்ததாக மேற்கு வங்கத்தில் மம்தா பானார்ஜியின் திரிணாமுல காங்கிரஸ் கட்சியும் காலியாகி உள்ளது. கேரளாவில் இடதுசாரிகள் அரசும் வீழ்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுகவும் வீழ்ந்துள்ளது. ஆனால் பாஜக மாநிலங்களில் குறிப்பாக புதுச்சேரி, அஸ்ஸாமில் (இந்த முறை) அந்த விதிவிலக்கு எப்படிச் சாத்தியமாகிறது என்பதற்கு திமுகவினர் வலுவான கேள்விகளை முன்வைக்கிறார்கள்.
திமுகவினர் குற்றச்சாட்டு
சாமானிய மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றைத் தாண்டி, தேர்தல் சமயங்களில் மத உணர்வுகளும், தீவிர தேசியவாதமும் முன்னிறுத்தப்படுகின்றன. இது மக்களின் வாழ்வாதாரக் கோபத்தை மழுங்கடிக்கச் செய்வதாக திமுகவினர் குற்றம்சாட்டுகிறார்கள்.
பாஜகவிற்கு சாதகம்
தென்னிந்திய மாநிலங்களைப் போலன்றி, வட மாநிலங்களில் வலுவான மற்றும் ஒன்றுபட்ட எதிரணி இல்லாத சூழல் பாஜகவுக்குச் சாதகமாக அமைகிறது. அங்கு எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பலவாறாகப் பிரிவதால், ஆட்சிக்கு எதிரான வாக்குகள் இருந்தும் அவை வெற்றியைத் தீர்மானிக்க முடியாமல் போகிறது. ஒரு அரசின் தோல்விகளைச் சுட்டிக்காட்டுவதை விட, அந்த அரசை வெல்ல முடியாத ஒன்றாகச் சித்தரிக்கும் போக்கை வட இந்திய ஊடகங்கள் கடைபிடிப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது சாமானிய மக்களின் மனவோட்டத்தில் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
புரியாத புதிர்
ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளைப் பொறுத்து ஆட்சி மாற்றம் ஏற்படுவது இயற்கை. ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும் அந்த இயற்கை விதி செயல்படாமல் இருப்பது ஏன் என்பதே திமுகவினரின் கேள்வியாக உள்ளது.
"எங்களுடைய திட்டங்களையும் உழைப்பையும் மக்கள் எடைபோடும் அதே தராசில், பாஜக ஆளும் மாநிலங்களின் செயல்பாடுகளும் ஏன் நிறுக்கப்படுவதில்லை?" என்பதே திமுகவினரின் பிரதான குமுறலாக இருக்கிறது. இந்த உண்மை தெரிந்தாக வேண்டும் என்றும், இது 'புரியாத புதிர்' என்றும் திமுகவினர் வாதத்தை வைக்கிறார்கள்














Click it and Unblock the Notifications