அப்பார்ட்மென்ட்களுக்கு "ஆப்பு"?.. அடுக்குமாடி கட்டிடத்தில் அரசு அதிரடி.. இனி யாருமே "மீற" முடியாது
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், அடுத்தடுத்த அதிரடிகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, கட்டிடங்கள் விவகாரத்திலும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாநகராட்சிகளில் வீடு, கடை,திருமண மண்டபம் மற்றும் வணிகவளாகங்கள் கட்டுவோர் அதற்கு கட்டிட வரைபட அனுமதி பெறவேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.. வீடுகளைப் பொறுத்தவரை 4 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு மாநகராட்சி கட்டிட அனுமதி வழங்குகிறது... அதற்கு மேலான கட்டிடங்களுக்கு, உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதி வழங்குகிறது.

இதில், விதி மீறல் கட்டிடங்கள், ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது..
விதிமீறல்கள்: இதையடுத்து, மாநகராட்சி அனுமதி வழங்கிய கட்டிட வரைபடத்தின் அடிப்படையில்தான் இனி கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றும், விதிமீறி கட்டப்படும் கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்தக் கட்டிடத்துக்கு வரி நிர்ணயம் செய்யக்கூடாது, மின் இணைப்பு வழங்கக்கூடாது, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கக்கூடாது என்றெல்லாம் ஏற்கனவே கடந்த காலங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், விதிமுறைகளை மீறி கட்டப்படும் அடுக்குமாடி கட்டிடங்களை தடுப்பதற்காகவே, அடுத்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.. அதன்படி, விதிமுறைகளை மீறி கட்டப்படும் அடுக்குமாடி கட்டிடங்களை அறிய, மாநகராட்சி கமிஷனர் தலைமையில் உயர்நிலை கண்காணிப்பு குழு ஒன்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள்: இதற்கு காரணம், தமிழகத்தில் விதிமீறல் கட்டிடங்களை தடுப்பதிலும், இது தொடர்பாக புகார்களை தந்தாலும்கூட, சம்பந்தப்பட்ட பிரிவின் சில அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதில்லையாம்.. பாதிக்கப்பட்ட புகார்தாரர்கள், ஹைகோர்ட்டை நாடி, உத்தரவு பெற்றால் மட்டுமே, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களாம்.. விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான, சமீபத்தில் தமிழக அரசுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.
இதையடுத்து, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், சென்னை மாநகராட்சி உட்பட, தங்கள் தரப்பு பரிந்துரைகளை வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு அனுப்பி வைத்திருந்தது.. இந்த பரிந்துரைகளின் அடிப்படையில்தான், தற்போது கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாம்.. இந்த அதிரடி உத்தரவை, வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் அபூர்வா உத்தரவிட்டுள்ளார்.
அரசாணை: இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், "சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர், சிஎம்டிஏவின் முதன்மை பிளானர், அல்லது அமலாக்கப்பிரிவு மூத்த திட்ட அதிகாரி, டிடிசிபி இணை இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, விதிமீறல் கட்டிடங்கள் மீதான நடவடிக்கையை கண்காணிப்பதே, இக்குழுவின் பிரதான பணியாக இருக்கும்' என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications