வந்த திடீர் உத்தரவு.. சென்னையில் எகிற போகுது அபார்ட்மெண்ட் விலை.. இதுதான் மேட்டர்.. எவ்வளவு தெரியுமா
சென்னை: சென்னையில் கூடிய விரைவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை உயர உள்ளது. இதற்கு என்ன காரணம்.. ஏன் திடீரென அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை உயர்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சென்னையின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இப்போது தனி வீடு என்பது எல்லாம் யோசிக்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இப்போது இங்கே வீடு வாங்க வேண்டும் என்றாலே பெரும்பாலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் தான் ஒரே ஆப்ஷன்.

நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் படுவேகமாக பல அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், இப்போது அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை அதிகரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விலை உயரும்: சென்னை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் புதிய மற்றும் சீரான வழிகாட்டி மதிப்புகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதனால் சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை உயரக்கூடும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இருக்கும் வழிகாட்டி மதிப்பின்படி அது தெருவுக்குத் தெரு வேறுபடும்,.. ஆனால், புதிய விதியில் அனைத்து பகுதியிலும் அமைந்துள்ள வீடுகளுக்கும் ஒரே வழிகாட்டி மதிப்பு இருக்கும். இந்த புதிய மதிப்பு பேஸிக், பிரீமியம் மற்றும் அல்ட்ரா பிரீமியம் என்று மட்டும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
3 வகைகள்: இதில் பேசிக் என்பது சாதாரணமான அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகும். பிரீமியம் வகை வீடுகள் என்பது நீச்சல் குளம் மற்றும் கிளப்ஹவுஸுடன் இருக்கும் வீடுகளாகும், மேலும், அல்ட்ரா பிரீமியம் என்பது அதைக் காட்டிலும் கூடுதல் வசதிகளைக் கொண்ட வீடுகளாகும். பல்லாவரம் பகுதியில் இந்த மூன்று வகை அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குச் சதுர அடிக்கு முறையே ₹6500, ₹8200 மற்றும் ₹10500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல நகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை மயிலாப்பூரில் குறைந்தது ரூ.16,000க்கு கீழ் வழிகாட்டு மதிப்புகளே இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் முன்பு உட்புற சாலைகளுக்கு ரூ.9000 என்றும் ராதாகிருஷ்ணன் சாலைக்கு அருகில் இருக்கும் பகுதிகளுக்கு ரூ.13000 என்றும் வழிகாட்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கும்: இந்த வழிகாட்டு மதிப்பு என்பது அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு மட்டுமே பொருந்தும், தனிப்பட்ட வீடுகள் அல்லது மனைகளுக்கு இல்லை. இருப்பினும், இந்த முடிவு அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விற்பனையை மோசமாகப் பாதிக்கும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், "ஒவ்வொரு தெருவிற்கும் விற்பனை விலை வேறு வேறாகவே இருக்கிறது. அப்படியிருக்கும் போது ஒரே வழிகாட்டு மதிப்பு என்பது எப்படி செட் ஆகும். கோயம்பேடு, அம்பத்தூர் மற்றும் மொகப்பேர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு சந்தையை மதிப்பை விட அதிகமாக இருக்கிறது. இன்னும் சில இடங்களில் இரண்டு மடங்கு அதிக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இது புதிதாக அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்குவோரைத் தடுக்கும்.
கைவிட வேண்டும்: எனவே, அரசு இந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும். இது சென்னையின் வளர்ச்சியையும் கடுமையாகப் பாதிக்கும். இப்போது மிக்ஜாம் புயல் மீட்புப் பணிகள் நடந்து வருவதால், அவை அனைத்தும் முடிந்த பிறகு இது குறித்து நாங்கள் தமிழ்நாடு அரசிடம் முறையிட உள்ளோம். சந்தை மதிப்பைக் காட்டிலும் இந்த வழிகாட்டு மதிப்பு அதிகமாக இருக்கிறது. மேலும், ஒரு ஏரியாவில் அனைத்து தெருக்களுக்கும் ஒரே விலை என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. இதைத் தமிழக அரசிடம் முறையிட உள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications