அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் எப்படி இருக்கிறார்? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை
சென்னை: அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் குறித்து வதந்திகள் பரவிய நிலையில் தற்போது அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்து அப்பல்லோ ஃபர்ஸ்ட் மெட் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.

அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் காலமாகிவிட்ட நிலையில் அவருக்கு பதில் கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்மகன் உசேன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியது முதலே தமிழ் மகன் உசேன் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒற்றைத் தலைமை என்ற பேச்சு எழுந்த போது ஓபிஎஸ்- எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு ஏற்பட்ட போது நடந்த பொதுக் கூட்டத்தில் அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக தமிழ்மகன் சென்னையில் உள்ள அப்பல்லோ ஃபர்ஸ்ட் மெட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் தமிழ்மகன் உடல்நிலை தொடர்பாக யாரோ வதந்தியாக பரப்பிவிட்ட செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த சூழலில் தமிழ்மகன் உசேன் குறித்து வரும் தகவல் பொய்யானது என அதிமுக மறுத்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "அதிமுக அவைத்தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்த தவறான செய்தியை, வதந்தியை எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.
ஒரு மூத்த அரசியல் தலைவரின் உடல்நிலை குறித்து, துளியும் அரசியல் நாகரிகம் இன்றி, விஷமத்தனமாக இப்படிப்பட்ட பொய் செய்திகளைப் பரப்புவது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இத்தகைய தவறான தகவல்களை யாரும் நம்பவோ, பரப்பவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழ்மகன் உசேன் உடல்நிலை குறித்து மருத்துவமனை சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்மகனே உசேனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது. இதனால் அதிமுகவினர் நிம்மதியடைந்துள்ளனர். அவர் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications