‘அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே’ புத்தகத்தை வெளியிட்ட கி.வீரமணி.. அந்த வார்த்தையை மறக்க முடியுமா?
சென்னை : கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் இன்று 'அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே' நூல் வெளியிடப்பட்டது. புத்தகத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டது. கருணாநிதியின் 100வது பிறந்த நாளையொட்டி இந்த ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு தரப்பிலும், திமுக கட்சி சார்பிலும் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஜூன் 3ஆம் தேதி அன்று மாலை 6 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா பிரமாண்ட பொதுக்கூட்டம் வடசென்னையில் நடக்க இருந்தது. ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து இந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இன்று வடசென்னை புளியந்தோப்பு பகுதியில் நடைபெற்று வருகிறது. சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க ஏற்பாடு செய்துள்ள இந்த பொதுக்கூட்டத்துக்கு தி.மு.க பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார். மேலும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா தொடங்கியதும், 'அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே' நூல் வெளியிடப்பட்டது. புத்தகத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.
'அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே' நூல், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நூல் ஆகும். முன்னாள் முதல்வரும் தனது தந்தையுமான கருணாநிதி மறைவின்போது, மு.க.ஸ்டாலின் தனது தந்தைக்கு உணர்ச்சிப்பூர்வமான இரங்கற்பாவை எழுதினார்.

"அப்பா அப்பா" என்பதைவிட, "தலைவரே தலைவரே" என நான் உச்சரித்ததுதான் என்வாழ்நாளில் அதிகம். அதனால் ஒரே ஒரு முறை, இப்போது 'அப்பா' என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே? எனக் கேட்டு ஸ்டாலின் எழுதிய இரங்கற்பா படிப்போரைக் கலங்க வைக்கக்கூடியது.
அந்த தலைப்பில், முதல்வர் ஸ்டாலினின் உரைகள் தொகுப்பு திமுக சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, கருணாநிதியின் பெருமைகள், மகத்தான சாதனைகள் பற்றி கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்திப் பேசுகின்றனர்.












Click it and Unblock the Notifications