"4 முறை இருந்தாரே" என எடப்பாடியை விமர்சித்த எ.வ.வேலு! குறுக்கே புகுந்த அப்பாவு! அவையில் பரபரப்பு
சென்னை: கேள்வி நேரத்தில் கள்ளச்சாராய விவகாரத்தை பேச அனுமதி கோரி அதிமுக அமளியில் ஈடுபட்ட நிலையில் நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது என சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் துணை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. காலை , மாலை என இரு வேளையும் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று 3ஆவது நாளாக சட்டசபை கூடியது.

அப்போது கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன்பு கள்ளச்சாராயம் குறித்து விவாதிக்க வேண்டும் என அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் சபாநாயகர் அப்பாவுவோ அவர்களை இருக்கையில் உட்காருமாறு எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.
இதையடுத்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது அப்பாவு பேசுகையில், நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது. பேச வேண்டிய நேரத்தில் பேச அனுமதிக்கிறேன். ஒரு விஷயம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கான கடிதம் தரவில்லை என்றாலும் பேச அனுமதிக்கிறேன் என சொல்கிறேன்.
ஆனால் அவர்களோ கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு கள்ளச்சாராய விவகாரம் குறித்து பேச வேண்டும் என அமளியில் ஈடுபடுகிறார்கள். கேள்வி நேரம் என்பது மக்களுக்கான நேரம், எதிர்க்கட்சிகளின் நேரம் அல்ல. அந்த நேரத்தில் மக்களின் பிரச்சினைகளைத்தான் பேச வேண்டும்.
இதெல்லாம் 4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமலா இருக்கும். சட்ட நடவடிக்கைகளை படித்துவிட்டுத்தானே எம்எல்ஏ ஆகிறோம். அப்படியிருக்க கேள்வி நேரத்தை ஒத்தி வைக்கச் சொன்னால் எப்படி? கேள்வி நேரம் முடிந்ததும் கேள்வியில்லா நேரத்தில் பேச அனுமதி தருகிறேன் என்று சொன்னதையும் அவர் ஏற்கவில்லை.
அவர்களுக்கு என்ன பிரச்சினையோ, வெளிநடப்பு செய்துவிட்டார்கள். வெளிநடப்பு செய்வதை எல்லாம் மக்கள் விரும்பவில்லை என கூறினார் அப்பாவு. இதையடுத்து அமைச்சர் எ.வ.வேலுவை பேச அழைத்தார். அவர் பேசும் போது கேள்வி நேரத்தின் போது எதை பேச வேண்டும் என 4 முறை முதல்வராக இருந்த எடப்பாடிக்கு தெரியாதா என கேட்டார்.
அப்போது உடனே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, 4 முறை அல்ல, 4 ஆண்டுகள் என திருத்தினார். இதையடுத்து தனது பேச்சை தொடர்ந்து வேலு. அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து கொண்டு சட்டசபைக்கு வந்தனர். இவர்கள் வெளிநடப்பு செய்ததுமே எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் கேள்வி நேரத்தில் மக்கள் பிரச்சினைகளைத்தான் பேச வேண்டும். கள்ளச்சாராயத்தால் மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இது உயிர் பிரச்சினை, இதை பற்றி விவாதிக்காமல் இதைவிட வேறு என்ன முக்கியமாக இருந்துவிட போகிறது. கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலியான போதே இது கள்ளச்சாராய பலி என ஆட்சியர் ஷ்ரவன்குமார் அறிவிக்காமல் வலிப்பு வந்து இறந்ததாக மட்டும் தெரிவிக்கிறார்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கே இவர்கள் எதற்காக இறந்தனர் என தெரிந்திருக்கும் போது ஆட்சியர் ஏன் பச்சை பொய் கூறினார். அவர் உண்மையை கூறியிருந்தால் துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் யாரும் கள்ளச்சாராயத்தை குடித்திருக்க மாட்டார்களே, இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காதே என எடப்பாடி பழனிசாமி ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 150 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் வயிற்றுப்போக்கு, கண் பார்வை குறைவு, காது கேளாமையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனினும் கள்ளச்சாராயத்தின் வீரியம் அதிகரித்துள்ளதால் பலர் உயிரிழந்து வருகிறார்கள். இதுவரை 54 பேர் இறந்துள்ளனர். இன்னும் பலர் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications