"பதறிய" எடப்பாடி.. "நடுங்கிய" ஓபிஎஸ்.. என்னங்க செய்வது இப்போ? பட்டென ஸ்டாலினை போய் பார்த்த அப்பாவு!
சென்னை: அதிமுகவின் சட்டமன்றத் துணைத் தலைவர் யார் என்பதை முடிவு செய்வது தொடர்பாக முதல்வரிடம் சபாநாயகர் அப்பாவு ஆலோசித்துள்ளார் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் பெற்றுள்ள நிலையில் இந்த ஆலோசனை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்றம் 17-ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில், தமிழக அரசின் சார்பில் முன் வைத்து விவாதிக்கப்பட வேண்டிய பொருள் பற்றிய எதிர்பார்ப்புகளை விட வேறு ஒரு விஷயம்தான் அதிக கவனம் பெற்றுள்ளது.
சட்டமன்றத்தில் அதிமுகவின் துணைத் தலைவர் யார் ? ஓபிஎஸ்சா? அல்லது ஓபிஎஸ்சை நீக்கி விட்டு எடப்பாடி நியமித்த உதயக்குமாரா? யாரை சபாநாயகர் அப்பாவு ஏற்கப் போகிறார்? என்கிற கேள்விகள் தான் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

ஓபிஎஸ் நீக்கம்
ஓபிஎஸ் நீக்கப்பட்டிருப்பதாகவும், அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஒப்புதலுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட உதயக்குமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி ஏற்கனவே கடிதம் எழுதி விட்டார். இதனை ஏற்க கூடாது என ஓபிஎஸ் தரப்பிலும் கடிதம் தரப்பட்டது. இந்த கடிதங்கள் சபாநாயகரின் ஆய்வில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், இருவரும் மீண்டும் சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அது ஏன் என்பதுதான் இப்போதையை கேள்வியாக இருக்கிறது.

அந்த கேள்வி
காரணம், சட்டமன்றம் கூடும் போது அந்த சட்டமன்றத்தின் கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பதை சபாநாயகர் தலைமையிலான அலுவல் ஆய்வுக் குழுவில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். பெரும்பாலும் இந்த அலுவல் ஆய்வுக் குழு, சட்டமன்றம் கூடும் முதல் நாளின் நிகழ்ச்சிகள் முடிந்ததும் அதனைத் தொடர்ந்து ஆய்வுக்குழு கூட்டம் கூடும். அதில் முடிவெடுக்கப்படும். அதே சமயம், முதல்நாள் சட்டமன்றம் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாகவே கூட இந்த அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுத்த சம்பவங்களும் உண்டு.

ஆய்வு கூட்டம்
அந்த வகையில், சட்டமன்றம் கூடுவதற்கு முதல்நாள் இந்த அலுவல் ஆய்வுக்குழுவினை கூட்டி முடிவெடுக்கலாமா? என்று முதல்வரிடம் ஆலோசித்துள்ளாராம் அப்பாவு. இது தான் எடப்பாடி, பன்னீர் இருவரையும் பதற வைத்து மீண்டும் நினைவூட்டல் கடிதம் போல அப்பாவுக்கு இரண்டாவது முறையாகவும் கடிதம் அனுப்பினர். மேலும் முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது. அதாவது, சபாநாயகர் தலைமையிலான அலுவல் ஆய்வுக் குழுவில், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் துணை தலைவராக இருப்பவர் குழுவின் உறுப்பினராக இருப்பார். அந்த வகையில், தற்போது வரை ஓபிஎஸ் தான் அக்குழுவின் உறுப்பினராக இருக்கிறார்.

கடிதம் அனுப்புவார்
அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, கூட்டம் கூட உள்ளதாகவும், உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும் சபாநாயகர் கடிதம் அனுப்பி வைப்பார். அந்த வகையில், அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள ஓபிஎஸ்சுக்கு சபாநாயகர் தகவல் தந்து விடக்கூடாது என்பதால் தான் மீண்டும் சபாநாயகருக்கு கடிதம் எழுதினார் எடப்பாடி. அவரை அழைக்கக் கூடாது என்றும், அலுவல் ஆய்வுக்குழுவிற்கு உதயக்குமாரைத்தான் அழைக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார் எடப்பாடி.

என்னுடைய கருத்து என்ன?
உடனே, ஓபிஎஸ்சும், இதில் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாக எனது கருத்தை நீங்கள் அறிய வேண்டும் என்றும், அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படிதான் அவர் (எடப்பாடி) தங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என்றும், ஆனால், அது தொடர்பான வழக்கில் இடைக்கால தடை உத்தரவை உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கிறது என்றும், அதனால் என் கருத்தை அறியாமல் முடிவெடுக்கக் கூடாது என்றும் சபாநாயகருக்கு தன் சார்பில் கடிதம் தந்திருக்கிறார் ஓபிஎஸ். எடப்பாடி போட முயன்ற கோலை ஓபிஎஸ் தடுத்து நிறுத்தி உள்ளார்.

ஒரு வாரம்
இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து முடிவை எடுக்க முடியாமல் சபாநாயகர் தவிப்பதால், அதிமுக விவகாரத்தில் யார் பக்கம் நாம் நிற்பது ? என்ன முடிவை எடுப்பது ? என முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டுள்ளாராம் அப்பாவு. நேரடியாக ஸ்டாலினை சென்று பார்த்து அப்பாவு ஆலோசனை கேட்டு இருக்கிறாராம். சட்டமன்ற விதிகளை திமுகவின் சட்ட வல்லுநர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். சட்டசபை தொடங்கி இன்னும் ஒரு வாரம் கூட முழுமையாக இல்லாததால் இந்த விஷயம் அதிமுக தரப்பில் கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

பதில் முடிவு
சபாநாயகர் அப்பாவு இதில் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றாலும் முன்பே இது தொடர்பாக பேட்டி அளித்து இருந்தார். அதில், ஓபிஎஸ், இபிஎஸ் அணியினருக்கான இருக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவை கூடும்போது தெரியவரும். இப்போதே அறிவிக்க முடியாது. இரண்டு பேருமே மூத்த தலைவர்கள். இரண்டு பேருமே ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். நிச்சயம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். அதேபோல் இருக்கைகள் ஒதுக்குவது தொடர்பாக சட்டமன்ற மரப்புபடியே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications