தமிழ்நாட்டில் ஏப்.16ஆம் தேதி 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி! உஷார் நிலையில் போலீஸ்!
சென்னை: உச்சநீதிமன்றம் கொடுத்த அனுமதியை தொடர்ந்து தமிழ்நாட்டில் நாளை மறுதினம் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததால் அந்த அமைப்பு உயர்நீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து சில கட்டுப்பாடுகளுடன் ஆர்.எஸ்.எஸ்.பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
அதில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெறுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதனிடையே தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடத்த அனுமதி அளித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழ்நாட்டில் நாளை மறுதினம் ஏப்ரல் 16ஆம் தேதி 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடத்த போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடைபெறும் அனைத்து இடங்களிலும் போலீஸார் உஷார் நிலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல காவல்துறை உயர் அதிகாரிகள் பேரணி நடைபெறும் இடங்களை நேரடியாக பார்வையிட்டு காவலர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.

கடந்த முறை ஆர்.எஸ்.எஸ்.பேரணி அறிவித்த போது அதற்கு போட்டியாக விடுதலை சிறுத்தைகள் சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த முறையும் அது போல் எந்த அரசியல் இயக்கமோ, அமைப்போ அறிவிப்பு வெளியிடவுள்ளதா என்பதையும் உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
தற்போது ரமலான் மாதம் நடைபெற்று வரும் நிலையில் ஆர்.எஸ்.எஸ்.பேரணியும் நடைபெறவுள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்படவுள்ளனர்.












Click it and Unblock the Notifications