ஓபிஎஸ்க்கு ஷாக்.. மார்ச் 26ல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்..எடப்பாடி பழனிச்சாமியின் கனவு நனவாகிறது
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வரும் நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை துவங்கி நடைபெற உள்ளது என அதிமுக தேர்தல் பிரிவு அறிவித்துள்ளது. இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ள நிலையில் இது ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கு இது அதிர்ச்சி வைத்தியமாக உள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தார். அவர் தான் அதிமுகவில் பொதுச்செயலாளராக இருந்தார். இதையடுத்து அதிமுகவில் இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது. ஓ பன்னீர் செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டனர்.
கடந்த ஆண்டு ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 11 ல் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. இதில் கட்சியில் இருந்து ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

பொதுக்குழு தீர்மான வழக்கு
இதை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செல்லும் என அறிவித்தது. இது ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் கடந்தாண்டு ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என கூறியது. அதன்படி ஓ பன்னீர் செல்வம் தரப்பில் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2022 ஜூலை 11 ம் தேதி பொதுக்குழு தீர்மானங்களை எதிர்க்கும் வழக்கு நிலுவையில் உள்ளது

தேர்தல் தேதி அறிவிப்பு
இது ஒருபுறம் இருக்க அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். விரைவில் இவர் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதிமுகவின் தேர்தல் பிரிவு சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு
அதன்படி கட்சியின் துணை பொதுச்செயலாளராகவும் தேர்தல் ஆணையாளராகவும் உள்ள நத்தம் விசுவநாதன் மற்றும் கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளரும் தேர்தல் ஆணையாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் சார்பில் இந்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அதிமுக சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2ல் குறிப்பிட்டுள்ளவாறு ‛‛கழக பொதுச்செயலாளர்'' கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்'' என்ற விதிமுறைக்கு ஏற்க ‛‛கழக பொதுச்செயலாளர்'' பொறுப்பிற்கான தேர்தல் கீழ்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறும்.

மார்ச் 26ம் தேதி தேர்தல்
அதன்படி வேட்புமனுத்தாக்கல் நாளை (மார்ச் 18) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (19ம் தேதி) பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம். மார்ச் 20ம் தேதி காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது. மார்ச் 21ம் தேதி பிற்பகல் 3 மணி வரை மனுவை திரும்ப பெறலாம். மார்ச் 26ம் தேதி பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. மார்ச் 27 ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

கட்டண தொகை ரூ.25 ஆயிரம்
‛கழக பொதுச்செயலாளர்'' பொறுப்பிற்கு போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள் மேற்கண்ட கால அட்டவணைப்படி தலைமை கழகத்தில் கட்டணத்தொகை ரூ.25,000 செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று கழக சட்டவிதி 20 அ பிரிவு - 1, (a) (b) (c) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி தங்களுடைய விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ஒருமனதாக ஈபிஎஸ் தேர்வு
தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராவது உறுதியாகி உள்ளது. மேலும் அவரை எதிர்த்து கட்சி சார்பில் யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யமாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி ஒருமனதாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான கனவு நனவாக உள்ளது.

ஓபிஎஸ் தரப்புக்கு ஷாக்
மேலும் இந்த அறிவிப்பு ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 2022 ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்தை எதிர்க்கும் வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த தேர்தல் அறிவிப்பு செல்லாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தேர்தலை எதிர்த்து சட்டபோராட்டம் நடத்த உள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தை நாட உள்ளதாகவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் அதிமுக விவகாரம் பரபரப்பான கட்டத்தை எட்ட உள்ளது.












Click it and Unblock the Notifications