உச்சக்கட்ட நெருக்கடியில்.. ஜெ.வின் அத்தியாயத்துக்கு "பிள்ளையார் சுழி" போட்ட அரங்கநாயகம்..!
ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்
சென்னை: இன்றைய அதிமுகவுக்கு மிக முக்கியமான தூண்களில் ஒருவர்தான் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்!
எம்ஜிஆர் காலத்து நபர்.. மிக திறமைசாலி.. எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பிறகு நடந்த முதல் தேர்தலிலேயே எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார் அரங்கநாயகம்...
எம்ஜிஆர் ஆட்சியிலும் சரி, அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதா ஆட்சியிலும் சரி, கல்வி அமைச்சர் என்றாலே, அது அரங்கநாயகம்தான்.
"அந்த 2 பேர்" இருக்காங்க.. கவலைப்படாதீங்க.. அதையெல்லாம் தூக்கி போடுங்க.. தெம்பூட்டும் இபிஎஸ்!
கல்லூரிகள்
தமிழகத்தில் இன்று தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த அளவுக்கு தோன்றியருக்கிறது என்றால், அது அரங்கநாயகம் போட்ட விதைதான்.. இவர்தான் இதற்கு மூல காரணம். எனினும், மறைந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராகவே கடைசி வரை திகழ்ந்தவர்.. 1988-ல் ஜெ. அணி & ஜா.அணி என்று அதிமுக பிளவுபட்டிருந்த சமயம்.. ஏராளமான அதிமுக மூத்த தலைவர்கள் ஜானகி அணி பக்கமே சாய்ந்திருந்தனர்.
ஜானகி அணி
மிக மோசமான ஒரு அரசியல சூழலை ஜெயலலிதா அப்போது எதிர்கொண்டிருந்தார். அந்த நேரத்தின் போது ஜெயலலிதாவுக்கு ஆதரவாகத் துணை நின்றவர் அரங்கநாயகம்தான். அதாவது ஜானகி அணியிலிருந்த ஆர்எம் வீரப்பனின் கட்டுப்பாட்டில் 98 எம்எல்ஏக்கள் அப்போது இருந்தார்கள்.. ஜெயலலிதாவுக்கோ வெறும் 29 எம்எல்ஏக்களின் ஆதரவுதான் இருந்தது. இந்த சமயத்தில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஜெவுக்கு ஆதரவளித்ததை மறக்க முடியாது.
நம்பிக்கை
இந்த சூழலில் ஜெயலலிதா தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.. அப்போது அரங்கநாயகம்தான் கல்வி அமைச்சராக இருந்தார்.. அவரது ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்தது.. இவர் ஜெ.அணியை சேர்ந்தவர்.. ஜெயலலிதா மீது மிகுந்த நம்பிக்கையை வைத்திருந்தவர்.. அதனால் தன் வீட்டிலேயே ஒரு அவசர கூட்டத்தையும் நடத்தினார்..
கல்வி அமைச்சர்
நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர் போன்ற ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் அனைவரையும் தன் வீட்டிற்கு வரவழைத்தார் அரங்கநாயகம். அப்போது அனைவர் முன்னிலையிலும், ''புரட்சித்தலைவி ஜெயலலிதாவை கட்சியின் பொதுச் செயலாளராக முன்மொழிகிறேன்'' என்று பிள்ளையார் சுழியை அதிரடியாக போட்டவர்தான் அரங்கநாயகம்.. அந்த நொடியில் இருந்துதான் ஜெயலலிதாவின் அரசியல் சூறாவளி ஆரம்பமானது... இந்த விஷயத்தை நீண்ட காலத்துக்கு ஜெயலலிதா நன்றியுடன் நினைத்து கொண்டிருந்தார்.. அரங்கநாயகம் தொடர்ந்துகல்வி அமைச்சராகவே விளங்கினார்.
முரண்பாடு
ஒருகட்டத்தில் அதிமுகவில் இருந்து விலகிய அரங்கநாயகம், 2006-ல் திமுகவிலும் இணைந்தார்.. திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராகவும் பணியாற்றினார்.. ஆனால் இடஒதுக்கீட்டு முறையில் வருமான உச்சவரம்பு கூடாது என்ற கருணாநிதியின் கருத்தில் இவருக்கு முரண்பாடு இருந்தது.. எனவே கட்சியை விட்டு விலகிவிட்டார்.. அதற்கு பிறகு தீவிர அரசியலில் இருந்தும் ஒதுங்கிவிட்டார்.
திமுக
என்றாலும், அதிமுக விசுவாசியாகவே இருந்து வந்தார்.. கடந்த வருடம்கூட இவர் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதாவது விபி துரைசாமி திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தபோது, "இனி திமுகவுக்கு மாற்று பாஜகதான்" என்று தெரிவித்திருந்தார்.. அந்த கருத்துக்கு அரங்கநாயகம் ஒரு பேட்டியில் பதிலடி தந்திருந்தார்..
அறுவடை
அதில், ''தமிழ் திருமுறைகள் நமக்கு சமத்துவத்தைத்தான் போதித்துள்ளன... வடநாட்டு அரசியலை போன்று மதத் துவேஷத்தை விதைத்து, வாக்குகளை அறுவடை செய்யலாம் என்று பாஜக கணக்கு போட்டால் அது தப்பாகிவிடும்.. 1967, 1971 தேர்தல்களில் மதபிரச்னையை தூண்டிவிட்டு, திமுகவை வீழ்த்த முயன்றார்கள். அது புஸ்வானம் ஆகிவிட்டது.. அந்த வியூகம் இனி இங்கு எடுபடாது... இந்துத்துவா அரசியலை ஒருபோதும் தமிழகம் ஏற்றுக்கொண்டதில்லை. வரவிருக்கும் தேர்தலில் எடப்பாடிக்கும் ஸ்டாலினுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி!" என்று காட்டமாக தெரிவித்தார்.
அரங்கநாயகம் எதை நினைத்து அப்படி சொன்னாரோ தெரியவில்லை.. இன்று அதுதான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது...!