ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்ட 10 கருணாநிதி படங்கள்... அதிலிருந்து அவர் தேர்வு செய்த பின்னணி இது தான்..!
சென்னை: சட்டப்பேரவையில் கருணாநிதி படம் திறக்கப்பட்டுள்ள நிலையில் அந்தப் படம் ஸ்டாலினால் தேர்வு செய்யப்பட்ட நிகழ்வு சுவாரஸ்யமானது.
அரசு ஆர்ட்ஸ் சார்பில் ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்ட 10 கருணாநிதி புகைப்படங்களில், அவர் நிற்பதை போன்ற படத்தை தேர்வு செய்து அனுப்பியிருக்கிறார் ஸ்டாலின்.
இதையடுத்து அந்தப் படத்தை மாதிரியாக கொண்ட அரசு ஆர்ட்ஸ் நிறுவனம், கருணாநிதியை தத்ரூபமாக ஆளுயர அளவுக்கு வரைந்துள்ளது.
ஆன்லைன் ரம்மி.. புதிய சட்டம் இயற்றி இளைஞர்கள் உயிரை காப்பாற்றுங்க.. ஸ்டாலினுக்கு, ராமதாஸ் கோரிக்கை
அரசு ஆர்ட்ஸ்
திமுக தொடர்புடைய எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, நிர்வாகிகள் முதலில் பேசுவது அரசு ஆர்ட்ஸ் நிறுவனமாகத் தான் இருக்கும். மனதில் தோன்றும் டிசைனகளை நிர்வாகிகள் கொட்டிவிட்டு மற்ற வேலைகளை பார்க்கச் சென்றுவிடுவார்கள். அவர்களே எதிர்பார்க்காத வகையில் அழகோவியம் தீட்டி அழைப்பிதழானாலும் சரி விளம்பர படமாக இருந்தாலும் சரி அதில் தனது தனித்தன்மையை அரசு ஆர்ட்ஸ் வெளிப்படுத்திவிடும்.
சட்டப்பேரவை
இதனிடையே சட்டப்பேரவையில் வைக்கப்படவுள்ள கருணாநிதி படம் தொடர்பான பணிகளையும் அரசு ஆர்ட்ஸ் நிறுவனத்திமே ஒப்படைத்தது சட்டப்பேரவை செயலகம். பேரவையில் வைக்கவுள்ள கருணாநிதியின் படம் காலத்திற்கும் பெயர் சொல்லும் வகையில் இருக்க வேண்டும் எண்ணிய அரசு ஆர்ட்ஸ் கலைஞர்கள் 10-க்கும் மேற்பட்ட படங்களை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மாதிரி அனுப்பி வைத்திருக்கின்றனர்.
10 படங்கள்
அந்த பத்து படங்களில் கருணாநிதியை அவரது புகைப்பட கலைஞர் யோகா எடுத்த படங்களும், கே.வி.ஆனந்த் எடுத்த படங்களும் அடங்கும். கருணாநிதி திடகாத்திரமாக இருந்தவரை பேனாவையும் அவரையும் பிரிக்க முடியாது. எழுதுவதையும், வாசிப்பதையும் தனது சுவாசமாக கொண்டவர். இதனால் கருணாநிதி புத்தகம் வாசிப்பது போன்ற படத்தையோ அல்லது எழுதுகோல் பிடித்து எழுதுவதை போலவோ தான் ஸ்டாலின் படத்தை தேர்வு செய்வார் என நினைத்திருக்கிறார்கள்.
எதிர்பார்க்காத
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கருணாநிதி யானை மீது கைவைத்து கம்பீரமாக நிற்பதை போன்ற படத்தை டிக் அடித்திருக்கிறார் ஸ்டாலின். மேலும், அந்தக் கருணாநிதி படத்தின் பின்னணியில், திருவள்ளுவர் படம், அலமாரியில் புத்தகங்கள் அடுக்கி வைத்திருப்பது, போன்ற காட்சிகளும் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார். இதையடுத்து இரவு பகல் பாராமல் ஒரு மாதத்துக்கும் மேலாக கருணாநிதி படத்தின் மீது கவனம் செலுத்தி பேரவையில் வைக்கப்பட்டுள்ள ஓவியம் வரையப்பட்டிருக்கிறது.