அந்த 1 காரணம்.. கை கோர்க்கும் எடப்பாடி - ஓபிஎஸ் - சசிகலா.. அடுத்தடுத்து நடந்ததை கவனிச்சீங்களா? ஆஹா
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு உள்ளதால், அதிமுகவில் டாப் தலைகள் எங்கே மீண்டும் சேர முயற்சி எடுத்து வருகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் பள்ளிவாசலில் காலணியுடன் அத்துமீறி நுழைந்த ராணுவ வீரர்! கடும் நடவடிக்கை கோரும் எஸ்.டி.பி.ஐ!
ஈரோடு கிழக்கு
அந்த சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சட்டசபை செயலாளர் இந்த சட்டசபை கூட்ட தொடரில் அறிவித்து விட்டார். விரைவில் இங்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பிளான் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் அதிமுகவில் டாப் தலைகள் எங்கே மீண்டும் சேர முயற்சி எடுத்து வருகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.சமீபத்தில் சட்டசபையில் நடந்த சில நிகழ்வுகள்தான் இந்த சந்தேகத்தையே உருவாக்கின. அதிமுகவில் தற்போது தேர்தல் ஆணைய விதிப்படி ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் இருக்கிறார். இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இதனால் ஒருங்கிணைப்பாளரை இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியில் இருந்து நீக்க முடியாது.
சட்டசபை
அதனால் சட்டப்படி ஓ பன்னீர்செல்வம் இப்போதும் எதிர்கட்சித் துணை தலைவர்தான். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வைக்கும் வாதத்தில், ஓ பன்னீர்செல்வத்திற்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை. ஆர்பி உதயகுமார்தான் எதிர்க்கட்சி துணை தலைவர் என்று வாதம் வைத்து உள்ளார். இதற்காக எடப்பாடி சார்பாக, ஆர்பி உதயகுமார்தான் அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் அவரைத்தான் அந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், நான்தான் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் நான்தான் அந்த இடத்தில் தொடர வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கையில் இதில் முடிவு எடுக்க கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார்.
சண்டை இல்லை
கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் இதற்காக எடப்பாடி பெரிய அமளியை செய்தார். ஆனால் இந்த முறை அமளி எல்லாம் செய்யவில்லை. ஒரே ஒரு முறை அப்பாவுவை அவையில் சந்தித்தார். அதோடு அவர் இதில் முடிவு எதையும் எடுக்கவில்லை. அவையில் பெரிதாக அமளி எதையும் செய்யாமல் ஓ பன்னீர்செல்வம் அருகிலேயே அமைதியாக அமர்ந்துவிட்டார். இருவரும் அருகருகே அமர்ந்து அமைதியாக இருந்தனர். எடப்பாடியின் இந்த திடீர் அமைதி காரணமாக எங்கே அவர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக இறங்கி வந்துவிட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
என்ன நடந்தது?
எடப்பாடியின் இந்த மனமாற்றம்தான் நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. எடப்பாடி இறங்கி போக ரெடியாகிவிட்டாரா? எடப்பாடி ஏன் அமளி செய்யவில்லை? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஓ பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி சமாதானமாக செல்ல தயாராகிவிட்டாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இன்னொரு பக்கம் சசிகலாவும் கூட ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை சந்திக்க போவதாக தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர் சந்திப்பில், ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோரை சந்திப்பீர்களா என்ற கேள்வி சசிகலாவிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சசிகலா, ஆரம்பத்தில இருந்து என்னோட உத்தியை பார்த்துட்டு இருக்கீங்க; இதுக்கு மேல நான் வெளிய சொல்ல கூடாது. என்னுடைய கட்சிக்காரர்களை நான் சந்திப்பதில் என்னங்க இருக்கிறது. இதில் என்ன இருக்க முடியும். நான் சந்திப்பேன். என்ன நடக்கும் என்று உங்களுக்கே வரும் நாட்களில் தெரியும், என்று சூசகமாக கூறினார்.
சட்டசபை
இன்னொரு பக்கம் அவையில் கூட்டத்தொடர் முழுக்க அதிமுக சார்பாக ஓ பன்னீர்செல்வம் பலமுறை பேசினார். அதற்கு முன் ஓபிஎஸ் இப்படி அதிமுக சார்பாக பேசும் போதெல்லாம் அதை எடப்பாடி டீம் கடுமையாக எதிர்க்கும். ஆனால் இந்த முறை அப்படி எல்லாம் எதிர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவையில் பின்னால் இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் பலர் ஓ பன்னீர்செல்வம் பேசியதை ரசித்து கேட்டுக்கொண்டுதான் இருந்தனர். ஓ பன்னீர்செல்வம் பேசுவதை எதிர்க்காமல், அவர் பேசுவதை சிரித்தபடி ரசித்துக்கொண்டுதான் இருந்தனர். இந்த தொடர் நிகழ்வுகள் காரணமாக அதிமுகவில் ஈரோடு கிழக்கு தொக்கு இடைத்தேர்தல் காரணமாக டாப் தலைகள் எல்லோரும் சமாதானமாகி செல்ல முடிவு செய்துவிட்டனரா? திமுகவை எதிர்க்க ஒரு குடையின் கீழ் செல்ல முடிவு செய்துவிட்டனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரவீந்தர் துரைசாமி
அதிமுகவில் நடக்கும் இந்த விஷயங்கள் பற்றி அரசியல் ஆலோசகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கில் எடப்பாடி தனியாக ஆளை நிறுத்தி திமுக கூட்டணியை வெல்ல முடியாது. ஈரோடு கிழக்கில் எடப்பாடி தனியாக ஒரு வேட்பாளரை நிறுத்தினார் என்றால் ஓ பன்னீர்செல்வம் போட்டிக்கு இன்னொரு வேட்பாளரை நிறுத்துவார். முதலியார் வேட்பாளரை நிறுத்துவார் . ஈரோடு கிழக்கில் இதனால் எடப்பாடிக்கு எதிராக நிலைமை மாறும் வாய்ப்புகள் உள்ளன. ஈரோடு கிழக்கில் மட்டும் எடப்பாடிக்கு ஓபிஎஸ் செக் வைத்தார் என்றால், அது எடப்பாடிக்கு பெரிய பாதிப்பாக அமையும். இந்த ஒரு தேர்தலை வைத்து நான் இல்லாமல் நீங்கள் வெல்ல முடியாது என்று ஓ பன்னீர்செல்வம் நிரூபிக்க முடியும், தனக்கு எல்லா மாவட்டங்களிலும் சப்போர்ட் இருக்கிறது என்று ஓபிஎஸ் சொல்லும் சூழ்நிலையை இது உருவாக்கிவிடும்.
என்ன சொன்னார்?
எடப்பாடி பழனிசாமி தனியாக நின்று ஸ்டாலினை எதிர்க்க முடியாது. அப்படி செய்தால் வெள்ளாள கவுண்டர்கள் இல்லாதோர் வாக்குகள் எடப்பாடிக்கு கொங்கில் கிடைக்காது. முக்குலத்தோர் வாக்கும் தெற்கில் கிடைக்காது. எடப்பாடி நினைத்தால் நிற்கலாம். ஆனால் அது எடப்பாடிக்கு தோல்வியை கொடுக்கும். ஸ்டாலினுக்கு வெற்றியை கொடுக்கும். இதனால்தான் அதிமுகவில் இருப்பவர்கள் சிலரே ஓ பன்னீர்செல்வத்தை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள், என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் உட்பட தேர்தல்களில் வெற்றிபெற வேண்டும் என்றால் அதற்கு அதிமுகவில் ஒற்றுமை தேவை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.