விடாமல் துரத்தும் பிரிஜ் பூஷன் விவகாரம்.. மல்யுத்த வீரர்களால்.. பத்ம விருதை திரும்ப தர முடியுமா?
சென்னை: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பத்மஸ்ரீ விருதைத் திரும்ப ஒப்படைத்துள்ளார். மேலும் சில வீரர்களும் விருதைத் திருப்பியளிப்பதாகக் கூறியுள்ளனர். இப்படி விருதைத் திருப்பி அளிக்க முடியுமா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்தான் இந்த பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் கடந்த மூன்று முறை தொடர்ச்சியாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராகப் பதவி வகித்து வருகிறார். அதேபோல கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்வாறு இருக்கையில் இவர் இளம் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் கடந்த ஜனவரியில் இது தொடர்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களைக் கிளப்பியது. நாட்டின் கொடியைச் சர்வதேச அரங்கில் உயர்த்த வீராங்கனைகள் இந்த கொடுமைகளை எல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டுமா? என்று அரசியல் கட்சியினர் கேள்வியெழுப்பினர். இந்த போராட்டத்தையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் மேரிகோம் தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் புகார்களை அளித்தனர். பின்னர் போராட்டம் தற்காலிகமாகத் திரும்பப்பெறப்பட்டது. ஆனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வீரர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். இது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.
நிலைமையைச் சமாளிக்க இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில் பிரிஜ் பூஷனுக்கு தொடர்புடைய யாரும் போட்டியிட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த போட்டியிலிருந்தே விலகுவதாக வீராங்கனை சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்கப் பேட்டியளித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாகப் பத்மஸ்ரீ விருது பெற்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தனது பத்ம விருதைத் திரும்ப ஒப்படைப்பதாகக் கூறினார். அதேபோல நேற்று, பிரதமரிடம் விருதை ஒப்படைக்க டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்றார். ஆனால் காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால், பிரதமரின் வீட்டு வாசலிலேயே அவர் விருதை வைத்துவிட்டுத் திரும்பிவிட்டார். இதன் தொடர்ச்சியாக விரேந்திர சிங்கும் தனது விருதைத் திரும்ப ஒப்படைப்பதாகக் கூறியுள்ளார்.
இப்படி பத்ம விருதை ஒப்படைக்க முடியுமா? என்று சோஷியல் மீடியாக்களில் கேள்விகள் பல எழுந்திருக்கின்றன. பத்ம விருதுகளைப் பொறுத்த அளவில், பத்ம விருதுகளை ஒப்படைக்க நமது நாட்டில் எந்த விதிகளும் கிடையாது. ஒருவேளை வீரர்கள் இந்த விருதைத் திருப்பி அளித்தாலும், விருது பெற்றவர்கள் பட்டியலில் இவர்கள் பெயர் இருக்கும். பத்ம விருதுகளை ரத்து செய்யக் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications