ஸ்டாலினின் பிளான் இதுதான்.. மோடி கிட்டயே போறார் முதல்வர்.. நாளை டெல்லி பயணம்.. ஆர்வத்தில் தமிழ்நாடு
சென்னை: பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை, நேரில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இந்த சந்திப்பு குறித்த புதிய தகவலை முதல்வர் ஸ்டாலினே வெளியிட்டிருக்கிறார்.
கடந்த வாரம், முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், ஆனால் பிரதமர் மோடி தரப்பில் இருந்து இதுவரை நேரம் வழங்கப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

முதல்வர் ஸ்டாலின்: பிரதமரை முதல்வரை சந்திக்கும் நேரம் உறுதி செய்யப்படும் பட்சத்தில், மோடியை முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
காரணம், 21 முதல் 24-ம் தேதி வரை பிரதமர் வெளிநாடு பயணம் சென்றிருந்ததால், இன்று அதாவது 25-ம்தேதி நேரம் ஒதுக்கியிருப்பதாக கூறப்பட்டது. எனவே, இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
கடிதம் எழுதிய ஸ்டாலின்: ஆனால், திமுகவின் பவளவிழா கொண்டாட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.. அந்த கடிதத்தில், பிரதமரை சந்திக்க டெல்லி செல்லவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதி கோரி செப்டம்பர் 26, 27 ஆகிய நாட்களில் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்றிட ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை வலியுறுத்திப் பெறவிருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். எனவே நாளை அதாவது 26, 27ம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின், பிரதமரை சந்திக்க உள்ளார்.
மெட்ரோ ரயில்: இந்த சந்திப்பின்போது, ஏராளமான விஷயங்களை பிரதமரிடம் வலியுறுத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. முதலாவதாக, சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கான மொத்த செலவான ரூ.63,246 கோடியில், மாநில அரசின் பங்கு ரூ.22,228 கோடி, மத்திய அரசின் பங்கு ரூ.7,425 கோடி.
எஞ்சிய நிதி ரூ.33,593 கோடியை வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து கடனாக பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... இதில் மத்திய அரசின் பங்கு நிதியை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மத்திய அரசு: அடுத்ததாக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய நிதியை, மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.. இந்த நிதியை உடனே விடுவிக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசும் கோரிக்கை விடுத்துள்ளது. தேசிய கல்விக்கொள்கையை ஏற்று, பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கனவே, தெரிவித்திருந்தார்.
எனவே, மேற்கண்ட விவகாரங்களை தமிழக முதல்வர் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தலாம் என தெரிகிறது.. அப்போது தமிழக நலன் சார்ந்த பல்வேறு அம்சங்கள் அடங்கிய கோரிக்கை மனுவையும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கி வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோரிக்கைகள்: அடுத்ததாக, மத்திய அரசின் சமக்கிர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காமல் உள்ளது. சமக்கிர சிக்ஷா அபியான் திட்ட நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் வலியுறுத்துவார் என தெரிகிறது.
அதுமட்டுமல்ல, அமெரிக்காவில் இருந்து கடந்த 14-ம் தேதி சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், "மெட்ரோ ரயில் திட்ட நிதி தொடர்பாக பிரதமரை நிச்சயம் சந்திப்பேன். பள்ளிக்கல்வியில் புதிய கல்விக் கொள்கையை ஏற்பது குறித்து அமைச்சர்களை, அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பிரதமரிடம் நேரம் கேட்டு, அவரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன்" என்று கூறியிருந்ததால், இது குறித்தும் பிரதமர் மோடியிடம் முதல்வர் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீதாராம் யெச்சூரி: மேலும், சமீபத்தில் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி இல்லத்திற்கு சென்று ஸ்டாலின்அஞ்சலி செலுத்துவார் என்கிறார்கள்.
அந்தவகையில், நாளை 26 மற்றும் 27 தேதிகளில் முதல்வர் டெல்லி செல்லும் பட்சத்தில், மாநில அரசின் நல்லுறவை மேம்படுத்த இந்த சந்திப்பு, மிகச்சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications