உயில் எழுதினால் மட்டும் போதுமா? சொத்துக்களில் இது முக்கியம்.. பதிவு செய்யப்படாத உயில் செல்லுமா? ஓஹோ
சென்னை: உயில் எழுதும்போது அதை பதிவு செய்வது அவசியமா? உயில் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு? உயில் பத்திரத்தை பதிய வேண்டுமானால் அதற்கு கட்டணம் எவ்வளவு?
ஒரு நபர் தன்னுடைய சொத்துக்களை தன் வாழ்நாளுக்கு பிறகு, மற்றவர்களுக்கு சேரும்படி எழுதி வைப்பதே "உயில் பத்திரம்" எனப்படும். ஒருவர் தான் சொந்தமாக சம்பாதித்ததை, தனக்குரிய சொத்துக்களை மட்டுமே உயிலாக எழுதி வைக்க முடியுமே தவிர, பூர்வீக சொத்தாக இருந்தாலும் அதை யாருக்கும் உயிலாக எழுத முடியாது, பிரித்து எழுதி வைக்கவும் முடியாது.

முக்கியத்துவம்: வாரிசு, டிரஸ்ட்டுகள் என தனக்கு விருப்பமானவர்களுக்கு உயில் எழுதி வைக்கலாம்.. வாரிசுகளுக்கு எழுதி வைக்காமலும் போகலாம். இதனை வாரிசுகளால் கேள்வி கேட்கவோ, எதிர்க்கவோ முடியாது.
உயில் எழுதியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாவிட்டாலும், அந்த சொத்துக்களால், பிற்காலத்தில், குடும்பத்தில் ஒருவருக்கும் எந்தவிதமான பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, முன்கூட்டியே எழுதி வைக்க நேரிடுகிறது..
சாட்சி கையெழுத்து: உயிலில் 2 சாட்சி கையெழுத்துக்கள் முக்கியம். ஆனால் சாட்சி கையெழுத்து போடுபவர்கள், உயிலுக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். உயிலில் டாக்டர் மற்றும் வக்கீல்களின் சாட்சி கையெழுத்து அவசியம்.. சாட்சி கையெழுத்து போடுபவர்கள் அவர்களது நிரந்தர முகவரியை குறிப்பிட வேண்டும்.
இந்த உயில் அமல்படுத்துபவருக்கு Will Executioner என்பார்கள்.. இவர் குடும்ப நண்பராக, நம்பகமான நிதி ஆலோசகராக என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அனைத்து குடும்ப உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பது அவசியம்.
ஒரு உயில் எழுதப்பட்ட நாளிலிருந்து எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் செல்லுபடியாகும்.. அதேபோல உயிலை எப்போது வேண்டுமென்றாலும் மெய்ப்பிக்கலாம்.. இதற்கு தடை ஏதும் இல்லை..
கடைசி உயில்: அதேபோல, நீங்கள் எழுதிய உயிலை ரத்து செய்யலாம், திருத்தம் செய்யலாம்.. எழுதிய உயிலை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றியும் கொள்ளலாம்.. ஒன்றிற்கு மேற்பட்ட உயில்கள் இருக்குமாயின் எந்த உயில் கடைசியாக எழுதப்பட்டதோ அதுவே செல்லுபடியாகும். பத்திரப்பதிவு செய்தாலும்சரி, செய்யாவிட்டாலும்சரி, கடைசியாக எழுதப்பட்டதே செல்லுபடியாகும்.
உயிலை பதிவு செய்வது கட்டாயமில்லை.. இது அவரவர் சொந்த விருப்பத்தை பொறுத்தது. ஆனாலும், உயிலை பதிவு செய்துவிடுவது மிகவும் நல்லது.. காரணம், பதிவு செய்யப்பட்ட உயிலுக்குதான் நீதிமன்றம் எப்போதுமே முன்னுரிமை தரும்.. இப்படி பதிவு செய்துவிடுவதால், பின்னாளில் வாரிசுகளுக்கும் பிரச்சனை வராது...
சர்டிபிகேட்: எனவே, 2 சாட்சிகளோடு சார்பதிவாளர் முன்னிலையில் உயிலை பதிவு செய்து விட்டால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைத்துவிடும். உயிலை எழுதியவர் நல்ல மனநிலையில் இருக்கும்போதுதான் இதை எழுதினார் என்று டாக்டர் ஒருவர் சர்ட்டிபிகேட் தர வேண்டும்.
உயில் பதிவு செய்ய கட்டணம் 1 சதவீதம் மட்டுமே.. அதுவும் சொத்து மதிப்பு குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே இந்த 1 சதவீதம் கட்டணமாக செலுத்த வேண்டும்.. முத்திரைத்தாள் கட்டணம் எதுவும் கிடையாது.
பதிவுக்கட்டணம்: ஒருவேளை சொத்து மதிப்புகள் எதுவுமே குறிப்பிடாமல் இருந்தால் வெறும் ரூ.500 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு முத்திரை கட்டணம் கிடையாது... உயிர் பத்திரத்துக்கு மட்டுமே இந்த சலுகை உள்ளதால், மற்ற பத்திரங்களுக்கு முத்திரை தீர்வை கட்டாயம் செலுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications