75 + 154+ 500.. அடுத்தடுத்த 2 நியூஸ்.. வெலவெலத்த சசிகலா! ஸ்டாலினும் விடலையே.. எல்லாம் டெல்லி கையில்!
சென்னை: அதிமுகவில் நடக்கும் விஷயங்களும், முதல்வர் ஸ்டாலின் போட்ட ஒரு உத்தரவும் சசிகலா தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சகோதரர் திவாகரனுடன் இணைந்து விட்டோம்.. மன்னார்குடி சொந்தங்களுடன் ராசி ஆகிவிட்டோம்.. ஓ பன்னீர்செல்வமும் அதிமுகவில் இணைய அழைத்துவிட்டார்.. டிடிவி தினகரனுடன் ராசி ஆகிவிடலாம்.. அதிமுகவை மீட்டு விடலாம் என்று நம்பிக்கையாக இருந்தார் சசிகலா.
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பு காரணமாக ஓ பன்னீர்செல்வம் கை ஓங்கியது. இதனால் அதிமுகவில் கண்டிப்பாக மீண்டும் என்ட்ரி கொடுக்கலாம் என்று சசிகலா அவ்வளவு நம்பிக்கையாக இருந்தார்.
அப்படிப்பட்ட சசிகலாவிற்குத்தான் இரண்டு செய்திகள் அடுத்தடுத்து இடியாக வந்து இறங்கி உள்ளது.
எடப்பாடியை விடுங்க.. ஓபிஎஸ்- சசிகலா- டிடிவி தினகரன் சீக்கிரம் சேருவாங்க.. பிளானை சொன்ன சையது கான்
செய்தி 1
அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று முதல்நாள் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி வெளியிட்ட அறிவிப்பை இரட்டை நீதிபதிகள் ரத்து செய்தனர். இதன் மூலம் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று முடிவு ஆகி உள்ளது. ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் தீர்ப்பு காரணமாக அதிமுகவில் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பின்னடைவு
இதன் மூலம் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் இடைக்கால பொதுச்செயலாளர் ஆகிறார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்படுகின்றன.ஓ பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் பதவியை இழக்கிறார். அதோடு அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்படுகிறார். ஓ பன்னீர்செல்வத்தின் உதவியுடன் அதிமுகவிற்குள் மீண்டும் என்ட்ரி கொடுக்கலாம் என்று நம்பிக்கையாக இருந்த சசிகலாவிற்கு இது பெரிய கெட்ட செய்தியாக வந்துள்ளது.
ஸ்டாலினும் விடலையே
இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் முதலவர் ஸ்டாலின் தரப்பும் சசிகலாவிற்கு செக வைத்துள்ளார். ஜெயலலிதா மரண வழக்கிலும் சசிகலா விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் முடிவில் அறிக்கை தயார் செய்யப்பட்டு அது தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டது. இந்த 500 பக்க அறிக்கை மொத்தம் சசிகலாவின் 75 நாட்கள் சிகிச்சை பற்றி விளக்கமாக தெரிவித்துள்ளது.
ஓபிஎஸ்
ஓபிஎஸ் உட்பட 154 சாட்சியங்களிடம் விசாரணை செய்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் சசிகலா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் இந்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும். இந்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை விவரங்கள் முழுமையாக பொதுவில் வெளியாகவில்லை. இதுதான் தற்போது சசிகலாவிற்கு எதிராக திரும்பி உள்ளது.
எதிரான அறிக்கை
ஏனென்றால், விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள திருமதி V.K.சசிகலா, திரு சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் C.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் இராம மோகன ராவ் உள்ளிட்டவர்கள் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்டவல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர், அதற்கான விபர அறிக்கையுடன், ஆணையத்தின் அறிக்கையை, சட்டப்பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது, என்று தமிழ்நாடு அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணை
இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் சசிகலாவிடம் விரைவில் விசாரணை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் நடக்கும் உட்கட்சி மோதல் விஷயங்களும், முதல்வர் ஸ்டாலின் போட்ட இந்த உத்தரவும் சசிகலா தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனால் கடந்த சில நாட்களாக சந்தோஷமாக இருந்த சசிகலா மீண்டும் சோகத்தில் இருக்கிறாராம். இப்போது அதிமுக பொதுக்குழு வழக்கு டெல்லிக்கு செல்ல உள்ளதால் அதில் என்ன முடிவு வரும் என்ற எதிர்பார்ப்பில் அவர் தரப்பு இருப்பதாக கூறப்படுகிறது.