"தூக்குங்க" அவரை.. குஷியில் 3 பேர்.. கச்சிதமா கணக்கு போடும் டெல்லி.. அப்ப இதான் நடக்க போகுதா..?
பாஜக மேலிடம் அதிமுக விவகாரத்தில் என்ன முடிவு எடுக்க போகிறது
சென்னை: அதிமுக விவகாரத்தில், பாஜக மேலிடம் என்ன நினைக்கிறது? அதிலும் ஓபிஎஸ்ஸை மொத்தமாகவே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதா? என்ற சந்தேகங்கள் பரவலாக எழுந்து வருகின்றன.
ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை தீவிரமான பாஜக ஆதரவாளர்.. பாஜக அபிமானி.. பாஜக தலைவர்களுக்கு நெருக்கமானவர்.. தமிழகத்துக்கு எதிரான திட்டங்கள், அறிவிப்புகள் வெளிவரும்போதுகூட, மேலிடத்தை பகைத்து கொள்ளாமல், யாருக்குமே வலிக்காமல் ஒரு கண்டன அறிக்கையை ஓபிஎஸ் வெளியிடுவார்.
இவராவது பரவாயில்லை.. இவரது மகன், டெல்லி அவையில் பேசும்போது, சிலசமயம் அதிமுக எம்பியா? பாஜக எம்பியா? என்று குழம்பி போகும் அளவுக்கு பேசுவார் என்ற விமர்சனங்களும் பலமுறை எழுந்துள்ளன..

தகராறுகள்
ஒவ்வொரு முறை அதிமுகவில், தகராறு வெடிக்கும்போதெல்லாம், முதலில் ஓபிஎஸ் டெல்லிக்கு செல்வார்.. அவருக்கு பின்னாடியே எடப்பாடியும் செல்வார்.. அங்கு என்ன நடக்கும் என்றெல்லாம் நமக்கு தெரியாது.. பிறகு 2 பேரும் சேர்ந்து சென்னை வந்து சேருவார்கள்.. இதுதான் கடந்த காலங்களில் தமிழகம் அறிந்த செய்தி.. ஆனால், இந்த முறை அப்படி இல்லை.. வழக்கம்போல் தகராறு வெடித்தது.. வழக்கம்போல் டெல்லிக்கு சென்றார் ஓபிஎஸ்.. ஆனால், அவருக்கான ஆதரவு அங்கு முழுமையாக கிடைத்ததா என்பது சந்தேகமாக உள்ளது. அமித்ஷாவை அங்கு சந்திக்க முடியவில்லை என்ற தகவலும் கசிந்தது..

பாஜக குறி
பாஜகவை பொறுத்தவரை, அதிமுகவின் ஓட்டுக்கள்தான் முதல் குறி.. இவர்களுக்குள் எவ்வளவுதான் முட்டிக் கொண்டாலும், அதிமுகவின் ஓட்டுக்கள் சிந்தாமல், சிதறாமல் அப்படியே பாஜகவுக்கு வந்துவிட வேண்டும் என்பதே அக்கட்சியின் விருப்பமாக உள்ளது.. அதற்காக இவர்களின் உட்கட்சி மோதலிலும் தலையிடயில்லை.. சண்டை போட்டுக் கொண்டிருந்த தலைவர்களையும் சமாதானப்படுத்தவில்லை.. இவர்களின் ஒற்றுமைதான் பாஜகவுக்கும் பலம் என்பதை சொல்ல வேண்டியதில்லை.. ஆனாலும், எடப்பாடியைவிட ஓபிஎஸ்ஸுக்கு கூடுதல் சப்போர்ட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

காணாமல் போன தீர்மானம்
மற்றொரு புறம், எம்பி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எடப்பாடியையும் பாஜக பகைத்து கொள்ள விரும்பவில்லை.. சசிகலா-டிடிவி இணைப்பு குறித்த தன் விருப்பத்தை பாஜக அன்று சொல்லியபோது எடப்பாடி ஒப்புக் கொள்ளவில்லை.. இந்த வருத்தம் இன்றும் பாஜகவுக்கு எடப்பாடி மீது இருக்கத்தான் செய்கிறது.. அதுமட்டுமல்ல, கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் தடுப்பூசி திட்டத்துக்காக பிரதமர் மோடியை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக இருந்தது.

டிடிவி தினகரன்
23 தீர்மானங்களுடன் சேர்த்து அந்த தீர்மானமும் நேற்றைய தினம் நிராகரிக்கப்பட்டதையும் பாஜக கவனிக்காமல் இல்லை. ஆனால், 90 சதவீதம் அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் இருப்பதால், அதை வைத்து எம்பி தேர்தலுக்கு கணக்கு போடுகிறது.. ஒருவேளை பாஜகவுக்கு எதிராக எடப்பாடி மறுபடியும் வேலையை காட்டினால், அப்போது ஓபிஎஸ்ஸுக்கு முழு ஆதரவை தந்து, சசிகலா, டிடிவியுடன் இணைக்கவும் பாஜக முயற்சி மேற்கொள்ளும் என்கிறார்கள்..

தினகரன் முடிவு
பாஜகவை பொறுத்தவரை டிடிவி மீது நிறைய நம்பிக்கை வைத்துள்ளது.. மிகசிறந்த அரசியல் தலைவர் என்ற வரிசையில் அவரை இணைத்து பார்க்கிறது.. அதேபோல, எப்போது வேண்டுமானாலும் பாஜகவுடன் சேர, டிடிவியும் தயாராகவே இருப்பதாக தெரிகிறது.. "அவரை இந்த பக்கம் கொண்டு வந்துடுங்க" என்று ஒருமுறை மேலிட தலைவர்களே விருப்பப்பட்டு சொன்னதாகவும் செய்திகள் வெளியாகின.. மற்றொரு புறம், டெல்லி பார்வை தன்மீது விழாதா என்று கடந்த ஒரு வருடமாகவே காய் நகர்த்தி வருகிறார் சசிகலா.. இதையெல்லாம் பாஜக நன்கு யோசித்து வைத்துள்ளது..

தெற்கு மண்டலம்
அதுமட்டுமல்ல, இப்போது அதிமுகவில் நிலவும் பூசல்களால், தென்மண்டலத்தில் ஏகப்பட்ட அதிருப்தியாளர்கள் உருவாகிவிட்டனர்.. இவர்களுக்கும் பாஜக குறி வைத்துள்ளதாம்.. எப்படி பார்த்தாலும் அதிமுகவில் பிரச்சனை இப்போதைக்கு தீர்வாகாத பட்சத்தில், அதிருப்தியாளர்களை வளைத்து பிடித்து, பாஜகவுக்கு கொண்டு வரும் வேலையும் ஆரம்பமாகிவிட்டதாக தெரிகிறது.. இதனால், தென்மண்டலங்களிலும் பாஜகவை காலூன்ற முடியும் என்று அக்கட்சி பலமாக நம்புகிறது.












Click it and Unblock the Notifications