ஏசியை ஜெட் வாஷ் பண்ண போறீங்களா.. இப்படியும் நடக்கலாம்.. நெட்டிசன் வெளியிட்ட விழிப்புணர்வு பதிவு
சென்னை: சென்னை போன்ற வெப்பமான நகரங்களில் ஏசி இல்லாமல் இரவுகள் கழியாது. கோடைக்காலம் இல்லை என்றாலும், சென்னையில் அறை வெப்பநிலை 33 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இரவில் இருக்கிறது. சென்னையில் வெயில் காலங்களில் அறை வெப்பநிலை 40 டிகிரி வரை கூட இருக்கும். இந்நிலையில் ஏசியை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டும். அப்படி சர்வீஸ் செய்த நெட்டிசன் வெளியிட்ட விழிப்புணர்வு பதிவினை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் மழைக்காலம் இன்னும் ஆரம்பிக்கவில்லை.. அதேநேரம் வெயில் காலம் முடிந்தாலும் வெயில் அவ்வளவாக குறையவில்லை.. குறிப்பாக சென்னை போன்ற கான்கிரீட் காட்டில் வாழ்வதற்கு ஏசி அத்தியாவசியான ஒன்றாக மாறிவிட்டது. சிறு வீடுகள் முதல் பெரிய வீடுகள் வரை பலரது வீடுகளில் ஏசி அத்தியாவசியமான இயந்திரமாக மாறிவிட்டது. என்னதான் மின் விசிறி இருந்தாலும், ஏசியில் இருந்து பழகியவர்கள், அதை தினமும் பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். இதற்கு காரணம், மொட்டை மாடிகளில் காற்று சில நேரங்களில் வந்தாலும், அது வீடுகளுக்குள் வருவதே இல்லை..

சென்னையை பொறுத்தவரை பல நாட்கள் மரங்கள் கூட அசையாத அளவிற்கு காற்றே இல்லாத நாட்கள் அதிகமாக இருக்கும். பகலைவிட உண்மையில் இரவில் தான் புழுக்கம் மிக அதிகமாக இருக்கும். இதனால் பல வீடுகளில் ஏசி பயன்படுத்தவது அதிகமாக உள்ளது. ஏசி பயன்படுத்துவோர் அதனை முறையாக அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். கோடைக்காலத்தில் மட்டும் பயன்படுத்திவிட்டு, குளிர்காலத்தில் சுத்தமாக பயன்படுத்தாமல் அப்படியே அதனை ஆறு மாதம் கழித்து பயன்படுத்துவார்கள் சிலர்.
அப்படி பயன்படுத்தும் முன்பு கண்டிப்பாக சர்வீஸ் செய்ய வேண்டும். அதேபோல் பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும், அவ்வப்போது சர்வீஸ் செய்தால், மின் கட்டணம் சேமிக்க முடியும். மேலும் பாதுகாப்பான உறக்கமும் கிடைக்கும். அதேபோல் குளிர்ந்த காற்றும் எளிதாக கிடைக்கும். இந்நிலையில் ஏசி வைத்துள்ள நெட்டிசன் ஒருவர் Make An Offer என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவினை பார்ப்போம்.
ஏசி வாங்கி 5 வருடம் ஆகிவிட்டது. இது வரைக்கும் ரெகுலர் சர்வீஸ் தான் பண்ணியிருக்கிறேன். முதல் முறையாக ஜெட் வாஷ் பண்ணலாம் என்று முடிவு செய்தேன். இந்த ஜெட்வாஷ் இருக்குற எல்லா அழுக்கையும் சுத்தமா எடுத்துட்டு வந்துரும். புது ஏசி மாதிரி ஆயிரும், அதனால கரண்ட் பில் கம்மியாகும் என்று சொன்னார்கள். நண்பர் பரிந்துரைத்த டெக்னீசியனுக்கு கால் பண்ணி வர சொன்னேன். அவர் ஒரு பையனை அனுப்பி வைத்தார்.
பையன் வந்து ஏசியை செக் பண்ணிட்டு, அழுக்கு அதிகமாக இருக்கு சார், மொத்தமா இன்டோர் யூனிட்டை அப்படியே தனியா கழட்டி சுத்தம் பண்ணினால் தான் சரியா இருக்கும் என்று சொன்னார். அதற்கு நான் சரி , எவ்வளவு ஆகும்? என்று கேட்டேன். அதற்கு அந்த பையன் "4000 ஆகும் சார்" என்றார்.
"என்ன ப்ரோ, 1500 தான் ஆகும்னு கேள்விப்பட்டேன். நீங்க என்ன அநியாயத்துக்கு ரேட் சொல்றீங்க" என்று கேட்டேன். "மொத்தமா கழட்டி மாட்டுனா கேஸ் லீக் ஆகும் சார். அதை ரீபிள் பண்ண சேர்த்து தான் இந்த அமௌண்ட்" என்றார். அப்போது நான் "ஆனால், நீங்க Outdoor இல் கேஸ் லாக் பண்ணிடுவீங்க இல்லையா? எப்படி லீக் ஆகும்?" என்று கேட்டேன். அதற்கு அந்த பையன், லாக் பண்ணிட்டாலும், பைப்ல இருக்குற கொஞ்ச கேஸ் லீக் ஆயிடும் சார். அதை Refill பண்ணினா தான் AC performance நல்லா இருக்கும்" என்றார். அப்போது நான், தம்பி... உன் பெர்பார்மன்ஸ் அதை விட பயங்கரமா இருக்கிறதே என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். எனக்கு தவறான நபரிடம் மாட்டிக்கிட்டோம் என்று மட்டும் புரிந்தது.
அவரிம் நான் இல்ல ப்ரோ.. நீங்க ஜெனரல் ஜெட் சர்வீஸ் மட்டும் பண்ணுங்கன்னு சொன்னேன். அப்போது அந்த பையன், "நீங்க சொல்றத பண்றேன் சார் ஆனா நான் பண்ணிட்டு போனதுக்கு அப்புறம் தண்ணி லீக் ஆகுதுன்னு கம்பளைண்ட் பண்ண கூடாது" என்றார்,. அப்போது நான் "Tray & Outlet பைப் நல்லா கிளீன் பண்ணிட்டா, எப்படி லீக் ஆகும்?" என்று கேட்டேன். அதற்கு அந்த பையன் பொதுவாக சொல்கிறேன் என்றார்.

எனக்கு பையன் மேல சுத்தமா நம்பிக்கை போய்விட்டது. வேலைய ஆரம்பிச்சான். இரண்டு வாளி தண்ணீர் உள்ள ஸ்ப்ரே பண்ண, எல்லா அழுக்கும் வெளியேறிடுச்சு.. அதை பார்க்கும் போது திருப்தியாகத்தான் இருந்தது. ஆனால் அடுத்த நாள், அந்த பையன் சொன்ன மாதிரியே தண்ணீர் சொட்ட ஆரம்பித்தது. ஏசியும் அவ்ளோ கூலிங் வரவில்லை.. இதனால் வேற ஒருத்தரை கால் பண்ணி வர சொன்னேன். அவரிடம் விஷயத்தை சொன்னேன்.
அவர் வந்து பார்த்துட்டு, ஸ்ப்ரே பண்ணதால அழுக்கு மொத்தமா பின்னாடி போய் சேர்ந்துவிட்டது. அது கொஞ்சம் கொஞ்சமா இறங்கி பைப்லைனில் அடைத்துக் கொண்டு நிற்கிறது அதான் தண்ணீர் வெளியேற முடியாமல் சொட்டுது என்று விளக்கமாக சொன்னார்.
அதன் பின்னர் பின்னாடி இருந்த அழுக்கை எல்லாம் சுத்தமாக எடுத்துட்டு Outlet Pipe இல் ஒரு ஸ்பிரிங்க விட்டு நல்லா கிளீன் பண்ணினார். இப்போது AC போட்டால் அடுத்த நிமிஷம் Chillness தெரியுது. தண்ணீரும் சொட்டவில்லை. ஒரு நல்ல டெக்னீசியன் கிடைக்குறதுக்கு கூட இப்போது அதிர்ஷ்டத்தை நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. தொழில்ல நேர்மை குறைஞ்சுக்கிட்டே வருது. யாரையும் நம்பி ஒரு வேலையை கொடுக்க முடியவில்லை . வெளிநாடு மாதிரி, எல்லா வேலையும் நாமே செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் போல" என்று கூறியிருந்தார். இந்த பதிவு ட்விட்டரில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications