காவி சாயம் பூச முடியாது என்று ரஜினிகாந்த் சொல்ல இதுதான் காரணம்.. அர்ஜுன் சம்பத் வித்தியாச விளக்கம்
சென்னை: எனக்கும் சரி.., திருவள்ளுவருக்கும் சரி.., காவி சாயம் பூச முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் என்று தெரிவித்துள்ள கருத்துக்கு, இந்து மக்கள் கட்சி தலைவரும், ரஜினிகாந்தின் நண்பர்களில் ஒருவருமான, அர்ஜுன் சம்பத் வித்தியாசமான ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
ரஜினிகாந்தின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டிவி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அர்ஜுன் சம்பத் கூறியதாவது:
ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து வரவேற்கத்தக்க கருத்து. காவி நிறம் என்பது தீண்டத்தகாத வண்ணம் கிடையாது. அது ஆன்மீக நிறம், ஆன்மீகத்துக்கு ஜாதி மதம் எதுவும் கிடையாது. திருக்குறளுக்கும், இந்துக்களுக்கும், மதம் என்ற அடையாளம் கிடையாது. இது சனாதன தர்மம் என்றுதான் அழைக்கப்பட்டு வருகிறது.
ரஜினி அரசியலுக்கு வரட்டும்.. ஆனால் இப்படி பார்க்கத்தான் எல்லோருக்கும் ஆசை.. அமீர்
காவி என்றால் தீவிரவாதம் என்பது போல முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போன்றோர் சித்தரித்து விட்டனர். ஆனால் வள்ளுவர் முன்பு காவி நிற உடையில்தான் வணங்கப்பட்டு வந்தார். எனவே அவருக்கு காவி சாயம் பூசுகிறார்கள், மதத்துக்குள் அவரை அடைப்பதற்கு முயற்சி நடைபெறுகிறது என்ற அர்த்தத்தில்தான் ரஜினிகாந்த் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசு விழாக்களில் குத்து விளக்கு ஏற்றுகிறார்கள், அது இந்து மத வழக்கம்தான், அதற்காக அதை மதவெறி என்று சொல்லிவிடமுடியாது. இதெல்லாம் நாம் காலம் காலமாக செய்து வரக்கூடிய பழக்கவழக்கம், தர்மம்.
எனவே, ரஜினிகாந்த் சொன்ன பதில், காவி என்றால் மதவாதம் என்று சொல்கிறார்களே அவர்களுக்கான பதில்தான். அந்த வகையில் ரஜினிகாந்தின் கருத்தை நான் வரவேற்கிறேன்.
காவியை இழிவுபடுத்துவது போல ரஜினிகாந்த் பேசவில்லை. திமுக ஆட்சிக் காலத்தில்தான் திருவள்ளுவர் கழுத்திலிருந்த உருத்திராட்சம் அகற்றப்பட்டது. சனாதன தர்மத்தை பொருத்தளவில் காவியோ அல்லது கருப்பு நிற ஆடையோ, பிரச்சினை கிடையாது. தேசியக்கொடியில் கூட காவி நிறம் உள்ளது. இவ்வாறு அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.