ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலுவுக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமீன்.. நீதிமன்றம் ஆணை!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள ரவுடி பொன்னை பாலுவுக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொன்னை பாலுவின் தாய் இறந்துவிட்டதால், இறுதிச் சடங்கில் பங்கேற்க ஜாமீன் கோரி அவர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். இந்நிலையில், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 30 பேர் மீது காவல்துறை குற்றம்சாட்டியது. இதில் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் பலியானார். முக்கிய குற்றவாளி நாகேந்திரன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இருவர் தற்போது வரை தலைமறைவாக உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று 4 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 250 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி 736 பக்க அறிக்கை தயாரித்து சமர்ப்பித்துள்ளது காவல்துறை.
இந்நிலையில், தனது தாய் இறந்து விட்டதால் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக தமக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி பொன்னை பாலு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரே மகன் என்ற அடிப்படையில் உயிரிழந்த தாய்க்கு பொன்னை பாலு மட்டுமே இறுதி சடங்கு மேற்கொள்ள வேண்டும் என்பதால் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பொன்னை பாலுவுக்கு ஐந்து நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications