ஆம்ஸ்ட்ராங் கொலை: கூலிப்படை தலைநகராக சென்னை.. பாஜக தலைவர்கள் நாளை டெல்லி செல்கிறார்கள்.. அண்ணாமலை
சென்னை: சென்னை கூலிப்படை தலைநகராக மாறிவிட்டது என்றும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர்கள் நாளை டெல்லி செல்ல இருக்கிறார்கள் என்றும் அண்ணாமலை கூறினார். ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்த பின் அண்ணாமலை இவ்வாறு கூறினார்.
சென்னை பெரம்பூரில் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினருக்கு இன்று மாலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,

தமிழ்நாட்டில் இதுபோன்று ஒரு அரசியல் தலைவர் படு கொலை நடக்கவில்லை. முதல் முறையாக அரசியல் தலைவர், தான் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டின் முன்பே கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. ஜேபி நட்டா முதல் தேசிய தலைவர்கள் வரை செல்போனில் இந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தனர்.
நாளை பாஜக மூத்த தலைவர்கள் 5 பேர் டெல்லி செல்ல உள்ளனர். டெல்லியில் காலை 11 மணிக்கு எல் முருகன் தலைமையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடக்க உள்ளது. மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என கோருவோம். பட்டியல் இன சகோதர, சகோதரிகளுக்காக இருக்கின்ற ஆணையத்தில், கடந்த 3 ஆண்டுகளில் பட்டியல் இன சகோதரர்களுக்கு நடந்துள்ள குற்றங்கள், வேங்கை வயலில் ஆரம்பித்து ஆம்ஸ்ட்ராங் வரை 17 சம்பவங்கள் பற்றி முறையிட போகிறோம்.
சென்னையில் ஒரு மாநில கட்சியின் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு பின்னால் யார் இருக்காங்க.. அரசியல் காரணம் இருக்கிறதா? பொருள் உதவி செய்தது யார்? என்ன காரணம் என்பதை எல்லாம் ஆராய வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மிக மோசமாக இருக்கிறது. குறிப்பாக சென்னை வந்து கூலிப்படையின் தலைநகராக இருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் பாஜக மகளிரணி மாநில பொது செயலாளருடைய கணவர் சீனிவாசனை இதேபோல கூலிப்படை அரிவாளால் வெட்டி சென்றது. இன்னும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு போராடி வருகிறார். சென்னையில் இந்த அளவுக்கு நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் முதல்வரின் பக்கத்தில் புலி பாய்ச்சல் வரவில்லை. இன்னும் ஆமை வேகத்தில் தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு நடந்து கொண்டிருருக்கிறது. எனவே இனிமேலாவது, கூலிப்படைகளுக்கு இடமில்லை என்று சொல்ல வேண்டும். இந்த நிலையை கொண்டு வரனும். செய்வார்கள் என்று நினைக்கிறேன்.
முன்னதாக அண்ணாமலை பதிவிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:- சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர், திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினோம். பெருந்துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது மனைவிக்கு, ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. அறிவார்ந்த தலைவராக விளங்கியவர். கல்விதான் சமூகத்தை முன்னேற்றும் என்பதை உணர்ந்து, பல இளைஞர்களின் உயர்கல்விக்கு ஊன்றுகோலாக இருந்தவர்.

சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் குரல் கொடுத்தவர். அதற்காகக் கடுமையாக உழைத்தவர். திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவு, சமூக ஒற்றுமையை விரும்பும் மக்கள் அனைவருக்கும் பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன். இந்தக் கொடூரமான செயலில் தொடர்புடைய அனைவர் மீதும், கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications