அரசுக்கு எதிராக புத்தகம் விற்பனை.. மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது.. எதிர்க்கட்சிகள் கண்டனம்
சென்னை: 'தமிழக அரசின் ஊழல்' என புத்தகம் வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் மக்கள் செய்தி மையத்தின் ஆசிரியர் அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கு திமுக, அமமுக, இடதுசாரிகள் உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், சென்னை புத்தக கண்காட்சியில், அதிமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் புத்தகம் இருந்ததால் 'மக்கள் செய்தி மையம்' அரங்கின் அனுமதியை ரத்து செய்து, பத்திரிகையாளர் அன்பழகனையும் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. அன்பழகன் உடனே விடுவிக்கப்பட்டு, உரிம அனுமதியும் திருப்பித் தரப்பட வேண்டும் என்றார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், சென்னை பத்திரிக்கையாளர் சங்க தலைவரும் மூத்த பத்திரிக்கையாளருமான திரு.V.அன்பழகன் நேற்று அதிகாலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. சென்னை புத்தக கண்காட்சியில் அவருக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட புத்தகங்களில், ஆளுக்கட்சிக்கு எதிரான கருத்துடைய புத்தகங்கள் இருந்ததுதான் இந்த கைதுக்கான பின்னணி என சொல்லப்படும் செய்திகள் மிகுந்த கவலையளிக்கிறது. கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற செயல்களை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட திரு.அன்பழகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில். சி.யூ.ஜே. பத்திரிகையாளர் அமைப்பின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான அன்பழகன், தமிழக அரசின் பல்வேறு ஊழல் முறைகேடுகளைத் தொகுத்து புத்தகங்களாக வெளியிட்டுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் கூட இதுபோன்ற புத்தகங்களை வெளியிட்டு உள்ளார்.
தற்போது சென்னையில் நடைபெற்றும் வரும் புத்தக கண்காட்சியில் மக்கள் செய்தி மையத்தின் சார்பில் கடை அமைக்கப்பட்டுள்ளது அதில் அதிமுக அரசின் ஊழல் முறைகேடுகள் குறித்து புத்தகங்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதைப்பொறுத்துக்கொள்ள முடியாத தமிழக அரசு அவரை கைது செய்துள்ளது. அது மட்டுமின்றி புத்தக் கண்காட்சியில் உள்ள அவரது கடையை காலி செய்யவும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) மூலம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது . தமிழக அரசின் இந்த அராஜக நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைகள் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பணியை செய்கின்றன. அப்படிப்பட்ட பணிகளில் ஈடுபட்டு வரும் பத்திரிகையாளரை மாநில அரசு அச்சுறுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கைது செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் அன்பழகனை உடனடியாக விடுதலை செய்வதுடன், புத்தக கண்காட்சியில் அவரது புத்தக கடையை நடத்திட அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.












Click it and Unblock the Notifications