கைதான தவெக நிர்வாகிகளை அழைத்துச் சென்ற கரூர் போலீசார்.. 2 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை!
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்ட 2 தவெக நிர்வாகிகள் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மற்றும், மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோருக்கு கரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடைபெறுகிறது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக கரூர் நகர போலீசார் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

அதன்படி, பிரிவு 105 (கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை), பிரிவு 110 (குற்றமற்ற கொலை செய்ய முயற்சி), பிரிவு 125 (மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசரம் அல்லது அலட்சிய செயல்களுக்கு தண்டனை), பிரிவு 223 (பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை), பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகனை தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். முதல் தகவல் அறிக்கையில் முதல் குற்றவாளியாக மதியழகன் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.
தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படையினர் அங்கு சென்று, மதியழகனை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் முதல் குற்றவாளியான மதியழகனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தவெக கரூர் மாநகர தவெக செயலாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். பவுன்ராஜை கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்ட 2 தவெக நிர்வாகிகளும் கரூர் நகர காவல் நிலையத்தில் இருந்து மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மற்றும், மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோருக்கு கரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications