2 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணை
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த ஆறுமுகசாமி ஆணையம் தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பால் கடந்த 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார்.
இந்த நிலையில் இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள் பலர் தங்கள் கருத்துகளை கூறியிருந்தனர். இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

ஜெயலலிதா உறவினர்கள்
இதன்படி ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், அரசு உயர் அதிகாரிகள் என இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கமளித்தனர். மருத்துவர்களை விசாரிக்கும் போது மருத்துவக் குழு வல்லுநர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

2 ஆண்டுகள்
இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற முடியாத சூழல் நிலவியது. இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எய்ம்ஸ் இயக்குநர் பரிந்துரையின்படி 6 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பாக நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குறுக்கு விசாரணை
அதில் சசிகலா தரப்பு மற்றும் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் பல்வேறு பரிந்துரைகளை வழங்கினர். முடிவில் அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேர் விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்கிறார்.

வீடியோ கான்பிரன்ஸ்
இந்த விசாரணையின் போது எய்ம்ஸ் பரிந்துரைத்த மருத்துவர்கள் குழு வீடியோ கான்பிரன்சிங் மூலமாக பங்கேற்பர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 ஆண்டுகள் கழித்து ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தொடங்கியுள்ளதால் விரைவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications