பூந்தமல்லி கல்லூரி மாணவி அருந்ததி.. தோழியுடன் சென்ற கடைசி பயணம்.. பின்னால் காத்திருந்த எமன்
சென்னை: சென்னையை அடுத்த பூந்தமல்லியில் எப்போதுமே லாரிகள் அதிகம் சென்று வருகின்றன. துறைமுகம் செல்லும் லாரிகள், துறைமுகத்தில் இருந்து வெளியே பல்வேறு நகரங்களுக்கு செல்லும் லாரிகள், குறிப்பாக பெங்களுர் மற்றும் ஆந்திரா செல்லும் லாரிகள் எந்தநேரமும் சென்று வருகின்றன. பூந்தமல்லி மற்றும் காட்டுப்பாக்கம் பகுதியில் லாரிகளை அதிக அளவில் காண முடியும். அப்படி வரும் லாரி ஒன்று கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு எமனாக மாறி உள்ளது. அதேநேரம் அவரது தோழி லேசான காயங்களுடன் தப்பி உள்ளார்.
சென்னையில் தண்ணீர் லாரி, மணல் லாரி, சரக்கு லாரிகள் உங்கள் முன்பாகவோ, அல்லது பின்பாகவோ வந்தால் கவனமாக செல்ல வேண்டும்.. ஏனெனில் அவர்கள் திடீரென பிரேக் போட்டாலும் உங்களுக்கு ஆபத்தாக முடியும். அதேபோல் முன்னால் செல்லும் வாகனம் மெதுவாக செல்லும் போது, நீங்கள் பிரேக் போட்டாலும், பின்னால் வரும் லாரிகள் உங்கள் மீது மோதுவதற்கு வாய்ப்பு அதிகம்.

ஏனெனில் வேகமாக வரும் லாரிகளால் திடீரென பிரேக் பிடிக்கும் போது கட்டுப்பாட்டில் வராது, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சிக்னல்களில் கட்டுப்படுத்த முடியாமல் மோதுவது அதிகம் நடக்கிறது. சில நேரங்களில் குறைவாக வேகத்தில் நீங்கள் செல்லும் போது, பின்னால் வரும் லாரிகள் மோதிவிடவும் வாய்ப்பு அதிகம். எனவே சாலையில் கடைசியின் லேனில் பயணிப்பதே இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு நல்லது.
சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், ஜானகி நகர், 1-வது தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் அருந்ததிக்கு 20 வயது ஆகிறது. பருத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை கல்லூரிக்கு புறப்பட்ட அருந்ததியை அவரது தந்தை, பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி பேரந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றார். அங்கிருந்து அவர், தன்னுடன் படிக்கும் மாங்காட்டைச் சேர்ந்த அவரது தோழியான 20 வயதாகும் பர்கானா என்பவருடன் ஸ்கூட்டியில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்.
சென்னீர்குப்பம் அருகே ஆவடி - சென்னீர்க்குப்பம் சாலையில், சென்றபோது பின்னால் மணல் ஏற்றி வந்த லாரி வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மெதுவாக சென்ற நிலையில், கண் இமைக்கும் நேரத்தில் இவர்களது ஸ்கூட்டி மீது மோதியது. இதில் நிலை தடுமாறி மாணவிகள் இருவரும் கீழே விழுந்தனர். அப்போது அதே லாரியின் சக்கரம் அருந்ததியின் தலையிலேயே ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய அவர், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
அவரது தோழியான பர்கானா லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து நடந்த உடனேயே லாரியை நிறுத்திவிட்டு, டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பூந்தமல்லி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications