அதிமுகவை தேர்ந்தெடுத்தால் டெல்லி நிலைமைதான் உங்களுக்கும் மக்களே.. தமிழகத்திற்கு கெஜ்ரிவால் வார்னிங்
சென்னை: இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இல்லை என்றாலும், மு.க.ஸ்டாலினுக்கான ஆதரவு தொடரும் என்று ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும், தமிழ்நாடு மக்கள் பாஜக- அதிமுகவை தேர்ந்தெடுத்தால் மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்படும் என்றும் டெல்லியில் கொண்டுவந்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் பாஜகவால் முடக்கப்பட்டது என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி மாஜி முதல்வருமான கெஜ்ரிவால் சென்னை வந்துள்ளார். நேற்றைய தினம் அவர் முதல்வர் ஸ்டாலின் உடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்கிடையே இன்றைய தினம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

கெஜ்ரிவால்
அப்போது பேசிய அவர், "டெல்லியில் இருந்து திமுக கூட்டணிகளுக்கான தமிழ்நாடு தேர்தலுக்குப் பிரச்சாரம் மேற்கொள்ள வந்துள்ளேன். அதற்கு சில காரணங்கள் உள்ளது. திமுக ஆட்சி மீண்டும் வர வேண்டும், கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் ஒரு சில திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் என்னை உற்சாகமாக வரவேற்றனர். திமுக மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் திமுக வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.
பாஜக
தமிழ்நாடு மக்கள் பாஜக கட்சியை வெறுக்கிறார்கள், அதிமுக கட்சி வழியாகத் தமிழ்நாடு உள்ளே நுழைய பார்க்கிறது பாஜக, மக்கள் நிச்சயம் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள். தனது சொந்த கட்சி பாஜக, ஆளும் மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளை முதலில் பாஜக பார்க்க வேண்டும். அதற்குப் பிறகு தமிழ்நாட்டைப் பற்றி அவர்கள் பேசட்டும்.
தமிழ்நாடு மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர். கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இந்த முறை திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். பாஜகவின் அனைத்து டபுள் இன்ஜினும் தோல்வி அடைந்துள்ளது. எந்த மாநிலங்களில் டபுள் இன்ஜின் நன்றாக இருந்துள்ளது, குஜராத் மாநிலத்தில் ஊழல் அதிகமாக உள்ளது" என்றார்.
விஜய்
இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமை பொறுப்பு ஏற்கலாமா என்ற கேள்விக்கு அவர், "நான் இந்தியா கூட்டணியில் இல்லை.. அதை இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் இடம் கேளுங்கள்" என்று பதிலளித்தார். விஜய் குறித்த கேள்விக்கு, "ஜனநாயக நாட்டில் அனைவரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது. ஆனால் இந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தோன்றவில்லை" என்றார்.
இந்தியா கூட்டணியில் இல்லை
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா கூட்டணியில் நான் இல்லை என்றாலும், நாங்கள் இருவரும் (மு.க.ஸ்டாலின்) சகோதரர்கள்.. நிச்சயம் அனைத்து தேர்தல்களிலும் நான் பிரச்சாரம் செய்வேன். தமிழ்நாடு மக்கள் பாஜகவை கொண்டு வந்தால் மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்படும், டெல்லியில் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் பாஜகவால் முடக்கப்பட்டது. இந்த நிலை தமிழ்நாட்டில் ஏற்படக் கூடாது. எனவே தமிழ்நாடு மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications