பெரிய மாற்றத்துக்கான தொடக்கம்.. முதல்வர் சொன்னபடியே மெரினாவில் நடக்கும் மாற்றம்.. நல்ல செய்தி!
சென்னை: சென்னை மெரினாவில் நிரந்தரமாக சாய்தள பாதை அமைக்கும் முடிவை மாநகராட்சி எடுத்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மெரினாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்தள பாதை அமைக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக அவ்வப்போது வார இறுதி நாட்களில் மட்டும் இந்த சாய்தள பாதைகள் தற்காலிகமாக அமைக்கப்படும்.
அப்போதில் இருந்தே இந்த பாதைகள் நிரந்தரமாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. மாற்றுத்திறனாளிகள் பலர் தங்களுக்கு நிரந்தர பாதை வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

நிரந்தர பாதை
இடையில் கொரோனா காரணமாக இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை மொத்தமாக அகற்றப்பட்டது. அதன்பின்பு நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த பாதை தற்காலிகமாக கொண்டு வரப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கில் சென்னையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மெரினாவிற்கு வந்து பார்வையிட்டனர். இந்த புகைப்படங்கள் இணையம் முழுக்க வெளியாகி கவனம் ஈர்த்தது. மாற்றுத்திறனாளிகளுக்காக வைக்கப்பட்ட இந்த பாதைகள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

முதல்வர்
அப்போதே இதை பற்றி கருத்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம். சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட, என்று குறிப்பிட்டு இருந்தார். அதாவது மெரினாவில் அவ்வப்போது தற்காலிகமாக அமைக்கப்படும் இந்த பாதை விரைவில் நிரந்தரம் ஆக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

வருகிறது புதிய பாதை
இந்த நிலையில்தான் முதல்வர் சொன்னபடியே தற்போது சென்னை மெரினாவில் நிரந்தரமாக சாய்தள பாதை பாதை அமைக்கும் முடிவை மாநகராட்சி எடுத்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 200 மீட்டர் தூரத்திற்கு இந்த பாதை நிரந்தரமாக அமைக்கப்பட உள்ளது. தற்போது geosynthetic மெட்டீரியல் மூலம் இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஈரத்தில் இந்த பாதை வீணாகாது என்பதால் இப்படி அமைக்கப்பட்டது.

மரத்தில் பாதை
ஆனால் இந்த பாதை ஈரம் ஆன பின் அதில் வீல் சேரை ஓட்டுவது கடினம் ஆகிறது. யாராவது பின்னே நின்று தள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் இந்த geosynthetic மெட்டீரியலுக்கு பதிலாக வேறு வகையான மர பாதை அமைக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்தனர் . இந்த geosynthetic மெட்டீரியல் பாதை அமைக்க 30 லட்சம் மட்டுமே செலவாகும். ஆனால் மர பாதை அமைக்க 2.5 கோடி ரூபாய் செலவு ஆகும்.

பாதை அமைக்க முடிவு
ஆனால் மறைப்பதை அமைப்பதே சரியானது.. அப்போதுதான் மாற்றுத்திறனாளிகள் இதில் செல்ல முடியும் என்பதால் அதை அமைக்க முடிவு செய்துள்ளனர். விரைவில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளன. இதில் 15 லட்சம் ரூபாயை அரசுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வழங்க உள்ளார் என்று கூறப்படுகிறது. அதேபோல் லைப் கார்ட், பாதுகாவலர்கள், லைப் ஜாக்கெட், மிதக்கும் வீல் சேர்கள் ஆகியவையும் இங்கே ஏற்படுத்தப்பட உள்ளது. மெரினாவை தொடர்ந்து மற்ற பீச்களில் இதே வசதி பின்னர் ஏற்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications