தமிழகத்தில் வரும் பிப். 7 முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை!
சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களிலும் வரும் பிப். 7ஆம் தேதி முதல் நேரடி விசாரணையை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாகவே பல விஷயங்களும் ஆன்லைன் முறைக்கு மாறியுள்ளது. அதன்படி நீதிமன்றங்களும் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் விசாரணை நடத்தத் தொடங்கின.

டெல்டா கொரோனாவுக்கு பின்னர் நேரடி விசாரணை தொடங்கினாலும் கூட, மீண்டும் ஓமிக்ரான் அலை காரணமாகக் கடந்த மாதம் மீண்டும் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டது,
இந்நிலையில், தற்போது 3ஆம் அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தற்போது சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உள்ளிட்ட நீதிமன்றங்களிலும் வரும் பிப். 7 முதல் நேரடி விசாரணையை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வரும் பிப். 7 முதல் நேரடியாகவும் காணொலி மூலமும் விசாரணை நடைபெறும் எனத் தலைமை பதிவாளர் பி தனபால் அறிவித்துள்ளார். கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் 2 டோஸ் வேக்சின் செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் சங்கம், வழக்கறிஞர் அறைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தில் உணவகம், நூலகம் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications