கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு வந்தேன்.. ஆனால் தங்கம் விலையைப் பார்த்ததும்.. ஷாக்கான பெண்
சென்னை: நாட்டில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.75 ஆயிரத்தைக் கடந்து வரலாறு காணாத உச்சத்தில் இருக்கும் நிலையில், இன்று தங்கம் வாங்க நகைக் கடைக்கு வந்த பெண்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். தங்கம் விலை இப்படி உயர்ந்து கொண்டே சென்றால், சாமானிய மக்களால் வாங்கவே முடியாத பொருளாக தங்கம் மாறிவிடும் என்று கூறியுள்ளனர்.
சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே, தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. அந்த வகையில் ஜூலை மாதத்தில் தங்கத்தின் விலை நடுத்தர மக்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது.

ஜூலை 2வது வாரத்தில் இருந்தே ஏற்றம் அடைந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாகச் சரியத் தொடங்கியது. ஆனால் கடந்த 2 நாட்களில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.74,280க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,380க்கும், சவரனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ.75,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் தங்கம் ரூ.75 ஆயிரத்தை எட்டி இருப்பதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆடி மாதம் தொடங்கி இருப்பதால், நல்வாய்ப்பாக திருமண சீசன் இல்லை. திருமண சீசனாக இருந்திருந்தால், மக்களிடையே தங்கம் வாங்குவதே கவலையாக மாறி இருக்கும். இந்த நிலையில் ரூ.75 ஆயிரத்திற்கு மேல் தங்கம் விற்பனையாகி வரும் நிலையில், தங்கம் வாங்க வருவோரின் மனநிலை என்னவாக உள்ளது என்பதைப் பார்க்கலாம்.
இதுதொடர்பாக நகைக் கடைகளுக்கு வந்த பொதுமக்கள் பேசுகையில், எனது கணவரின் பிறந்தநாளுக்கு கிப்ட் கொடுத்து சர்ப்ரைஸ் செய்வதற்காக ஒரு மோதிரம் வாங்க வந்தேன். இங்கு வந்து பார்த்தால், தங்க விலை மிகவும் அதிகமாக உள்ளது. இந்த விலைக்குச் சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாது. அதனால் மத்திய அரசு தங்கம் விலையைக் குறைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறினார்.
அதேபோல் மற்றொரு பெண் பேசுகையில், தங்க நகைச்சீட்டு போட்டு நகை எடுக்கலாம் என்று வந்தோம். ஒரு ஆண்டுக்கான சீட்டுப் போட்டு நகை எடுக்கலாம் என்று வந்தோம். ஆனால் இன்றுதான் தங்கம் விலை உச்சத்தில் இருக்கிறது. இப்படி இருந்தால் எங்களைப் போன்ற நடுத்தர மக்கள் எப்படி தங்கம் வாங்குவது? தங்க நகை வாங்குவதே எதிர்காலத்திற்கான ஒரு முதலீடு தான்.
ஆனால் இவ்வளவு தொகை கொடுத்து எப்படி வாங்க முடியும்? என் மகளுக்காக நகை சேர்க்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். ஆனால் தங்கம் விலை இப்படி உயர்ந்து கொண்டே சென்றால், எங்களால் வாங்கவே முடியாது. இதனை மத்திய அரசு பரிசீலித்து நடவடிக்கை மேற்கொண்டால், நடுத்தர மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications