திமுக கூட்டணிக்கு ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி ஆதரவு.. வீடியோவில் சொன்ன முக்கிய தகவல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி வீடியோ வெளியிட்டுள்ளார். தெலுங்கானா, பீகார் உள்பட பல மாநிலங்களில் இஸ்லாமியர்களின் ஓட்டுகளை பிரித்து காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறார் ஓவைசி. இப்படியான சூழலில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணிக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளது முக்கிய கவனம் பெற்றுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இடையே நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் தான் ஒவ்வொரு ஓட்டுகளும் முக்கியம் என்று திமுக, அதிமுக கட்சிகள் பல்வேறு கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்துள்ளன. இதுதவிர பல்வேறு அமைப்புகளிடம் இருகட்சிகளும் ஆதரவு கோரி வருகின்றன.
திமுக கூட்டணிக்கு ஓவைசி ஆதரவு
இந்நிலையில் தான் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அசாதுதீன் ஓவைசி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:
''வணக்கம், ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். இந்த வீடியோ வாயிலாக நான் மரியாதைக்குரிய தமிழக வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை ஏப்ரல் 23ம் தேதி நடக்கும் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு செலுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
மீண்டும் ஸ்டாலின் ஆட்சி
உங்களின் ஆசீர்வாதம் மற்றும் ஆதரவால் மீண்டும் ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நம்புகிறோம். எதிர்பார்க்கிறோம். எங்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஏற்கனவே ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். மீண்டும் ஒருமுறை கோரிக்கை வைக்கிறேன். ஏப்ரல் 23ம் தேதி நடக்கும் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். நல்வாழ்த்துகள். நன்றி'' என கூறியுள்ளார்.
காங்கிரஸ் - ஓவைசி மோதல்
அசாதுதீன் ஓவைசியின் இந்த அறிவிப்பு என்பது தமிழகத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை.
இதற்கு முக்கிய காரணம் பல மாநிலங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து ஓவைசி தனது வேட்பாளர்களை களமிறக்குவது தான். ஓவைசி கட்சியின் வாக்கு வங்கியாக இஸ்லாமியர்கள் உள்ளனர். அதேபோல் இஸ்லாமியர்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வருகின்றனர். இப்படி இருக்கும்போது ஓவைசி கட்சி - காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிடும்போது இஸ்லாமியர்களின் வாக்குகள் சிதறும்.
எதிரெதிர் துருவங்கள்
இதனால் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றியை ஓவைசி கட்சி வேட்பாளர்கள் பறித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. பல மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த தொகுதிகளில், ஓவைசி கட்சியின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள், அந்த வித்தியாசத்தை விட அதிகமாக இருந்ததுள்ளன. இதனால் இருகட்சிகளும் எதிரெதிர் துருவங்களாக உள்ளன.
பீகார் - மகாராஷ்டிரா தேர்தலில்..
கடந்த ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் சீமாஞ்சல் பகுதியில் ஓவைசி கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளால் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கூட்டணி வேட்பாளர்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களிடம் தோல்வியடைந்தனர். அதேபோல் மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநில தேர்தல்களில் ஓவைசி தங்களின் வெற்றியை பறித்ததாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
திமுக கூட்டணிக்கு பிளஸ்
அதுமட்டுமின்றி பாஜகவின் பி டீம் தான் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி என்று காங்கிரஸ் தலைவர்கள் பலமுறை விமர்சனம் செய்து வருகின்றனர். இப்படியான சூழலில் தமிழக சட்டசபை தேர்தலில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
ஒருவேளை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தால் அது மீண்டும் காங்கிரஸ் மட்டுமின்றி திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை கேள்விக்குறியாக்கி இருக்கும். இப்படியான சூழலில் தான் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடாத ஏஐஎம்ஐஎம் கட்சி திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications