கொடூரமாக தாக்கப்படும் கோயில் யானை? மீட்க வந்த அசாம் அரசு.. "சான்ஸே இல்லை".. மறுத்த தமிழக அரசு!
சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோயில் யானையை அதன் பாகன்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலானதை அடுத்து அதனை மீட்டு செல்வதற்காக அசாமை சேர்ந்த அரசாங்கக் குழுவினர் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர். ஆனால், யானையை தமிழக அரசு ஒப்படைக்க மறுப்பதால் இரு மாநில அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பராமரிக்கப்படும் கோயில் யானை ஜெய்மால்யதா. இந்த யானை கடந்த ஆண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது இந்த யானையை மரத்தில் கட்டி அதன் பாகன்கள் இரண்டு பேர் சேர்ந்து கட்டையால் கடுமையாக தாக்கினர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. யானையை கொடுமைப்படுத்திய பாகன்களை கைது செய்யக் கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக, அந்த பாகன்கள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை போலீஸார் கைதும் செய்தனர்.

மீண்டும் தாக்கப்படும் ஜெய்மால்யதா யானை?
இந்த சூழலில், அதே ஜெய்மால்யதா யானையை இரும்புச் சங்கிலியால் கட்டி வைத்து பாகன் ஒருவர் கடுமையாக தாக்குவது போன்ற வீடியோ சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவியது. விலங்குகள் நல அமைப்பான பீட்டா சார்பில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்த வீடியோவை பார்த்த லட்சக்கணக்கான மக்கள், யானை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், யானையை மீட்க சன்னி லியோன், மாதுரி தீட்சித் போன்ற பாலிவுட் நடிகைகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.

அசாம் அரசு குற்றச்சாட்டு
இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து, ஜெய்மால்யதா யானை அசாமில் இருந்து தமிழகத்துக்கு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அசாமை சேர்ந்த கிரின் மோரான் என்ற யானை பராமரிப்பாளர் ஜெய்மால்யதா யானையை 3 வருட லீசுக்கு தமிழக அரசிடம் 2011-இல் ஒப்படைக்கப்பட்டதாகவும், ஆனால் காலக்கெடு முடிந்த பிறகும் யானையை தமிழக அரசு வழங்கவில்லை எனவும் அசாம் அரசு தெரிவித்துள்ளது.

மீட்க வந்த அசாம் குழு
இதனைத் தொடர்ந்து, தற்போது அந்த யானையை மீட்க அசாம் அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக அசாம் அரசாங்கக் குழுவினர் கடந்த வாரம் தமிழகம் வந்தனர். ஆனால், அசாமிடம் யானையை ஒப்படைக்க தமிழக இந்து சமய அறநிலையத்துறை திட்டவட்டமாக மறுத்துவிட்டது. யானை தாக்கப்படும் வீடியோ பழையது என்றும், தற்போது யானை சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது எனவும் இந்து சமய அறநிலையத்துறை அசாம் குழுவினரிடம் தெரிவித்துள்ளது.

ஒருவாரமாக முகாம்
அதேபோல, ஜெய்மால்யதா யானை தங்களுக்கு விற்கப்பட்டு விட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், தமிழக அரசின் வாதத்தை ஏற்க அசாம் அரசு தயாராக இல்லை. யானையை எப்படியாவது மீட்டு வருமாறு தங்கள் குழுவினருக்கு அசாம் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அசாம் குழுவினர் தமிழகத்தில் ஒரு வாரமாக முகாமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications