குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. சென்னை, டெல்லியிலும் வடகிழக்கு மாநில மாணவர்கள் போராட்டம்
சென்னை/ டெல்லி: குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை, டெல்லி ஜந்தர் மந்தரில் வடகிழக்கு மாநில மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவியது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2015-ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை இந்தியாவில் குடியேறிய அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் மசோதா அண்மையில் இரு அவைகளிலும் நிறைவேறியது.

இந்த நிலையில் இந்த மசோதாவில் இடம்பெற்ற 6 மதத்தினருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் முஸ்லிம்களின் பெயர் இல்லை. இதுவும் இந்த மசோதாவை எதிர்க்க முக்கிய காரணமாகும்.
மசோதாவை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் மாணவர் அமைப்புகள் கல்வீச்சு, வாகனங்களுக்கு தீவைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளன.
இதை தவிர்க்க போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி வருகின்றனர். எனினும் வடகிழக்கு மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் அஸ்ஸாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அஸ்ஸாமியர்கள் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். அது போல் டெல்லி ஜந்தர் மந்தரிலும் வடகிழக்கு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications