அதிமுக பாஜ கூட்டணி தொகுதி பங்கீடு இழுபறி.. தேதி குறித்த அமித்ஷா.. மீண்டும் பேச்சுவார்த்தை
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி டாப் கியரில் பறத்து கொண்டிருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணி பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் வருகிற மார்ச் 16 ஆம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணியில் அன்புமணி பாமக, அமமுக, தமாகா தவிர பெயர் சொல்லும் கட்சிகள் இல்லை. ஏற்கனவே கூட்டணியில் இருந்த தேமுதிக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் திமுகவுடன் இணைந்துள்ளனர். திமுக சுமார் 23 கட்சிகளை கூட்டணியில் இணைத்து தொகுதி பங்கீட்டை வேகமாக முடித்து வருகிறது. விலகுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி திமுகவிலேயே ஐயக்கியமாகிவிட்டது. திமுக தரப்பில் தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பதும், வேட்பாளர் அறிவிப்பும் தான் மீதமுள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி இழுபறி
ஆனால் அதிமுக பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. மதுராந்தகம், திருச்சி ஆகிய 2 பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொது கூட்டங்கள் நடத்திவிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கடி தமிழ்நாடு வரத்தொடங்கிவிட்டனர். கூட்டணியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகள் செய்தும் நிறைவேறவில்லை. கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வந்தார்.
பாஜக 50 தொகுதிகள் கேட்டு நெருக்கடி
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 25-30 தொகுதிகள் ஒதுக்க எடப்பாடி முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக சார்பில் 50 தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக அதிமுக செல்வாக்காக உள்ள தொகுதிகளை பாஜக கேட்பதால் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை. பாஜகவுடன் தொகுதி பங்கீட்டை முடிக்காமல் கூட்டணியில் உள்ள இதர கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்ய முடியாத நிலையில் அதிமுக உள்ளது.
மார்ச் 16 முதல் தொகுதி பங்கீடு
தற்போதைய அரசியல் சூழலில் தவெக விஜய்யை தங்கள் பக்கம் இழுத்தால்தான், திமுக கூட்டணியுடன் போட்டி போட முடியும் என பாஜக நினைக்கிறது. இதனால் பாஜக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக தற்போதுவரை, தேஜகூவில் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதால், தேஜகூவில் தொகுதி பங்கீடு இறுதி செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி வருகிற மார்ச் 16 ஆம் தேதி (நாளை மறுநாள்) முதல் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.












Click it and Unblock the Notifications