ஆன்லைன் ரம்மி தடை மசோதா.. தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உண்டு.. மீண்டும் மசோதா நிறைவேற்ற முடிவு!
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ஆன்லைன் ரம்மி தடைக்கு மீண்டும் சட்ட மசோதா கொண்டு வர அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அதேபோல் ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்றும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை கடந்த ஆண்டு அக்.19ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது.
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்துக்கு ஏற்கெனவே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த அவசர சட்டத்தை சட்டமாக்குவதற்கான சட்ட மசோதாவைத் தான் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தது.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா
இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கோரி அனுப்பப்பட்டது. இந்த சட்ட மசோதா ஆளுநரிடம் கடந்த 4 மாதங்களாக பரிசீலனையில் இருந்தது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக அந்த சட்ட மசோதாவில் சில விளக்கங்களைக் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். ஏற்கனவே ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய பதில் அளித்த நிலையில், மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமைச்சரவை கூட்டம்
இதனால் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரகுபதி பேட்டி
இதன் பின்னர் அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ரகுபதி கூறுகையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்ற அதிகாரமில்லை என்று ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இருக்கிறது என்று கூறி மீண்டும் சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றி அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

நீதிமன்றம் செல்லத் தேவையில்லை
அதேபோல் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் சட்டம் இயற்ற நீதிமன்றம் ஏற்கனவே அதிகாரம் கொடுத்துள்ளது. உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் படியே ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து பரிந்துரைகள் பெறப்பட்டன. நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளின் படியே மசோதா நிறைவேற்றப்பட்டது.

மக்கள் பாதுகாப்பு
மக்களை பாதுகாக்கவே ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டு வரப்படுகிறது. மீண்டும் மசோதா நிறைவேற்றி அனுப்பினால், ஆளுநர் நிராகரிக்க முடியாது. மத்திய அரசின் அதிகாரங்கள் பட்டியலில் உள்ள 34வது பிரிவின் கீழ் தான் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் குறிப்பிட்டது போல் 33வது பிரிவின் கீழ் மசோதா நிறைவேற்றப்படவில்லை. இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும். நாங்கள் அதற்கு முன்னோட்டமாக தடை செய்கிறோம்.

எந்த வருவாயும் இல்லை
மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டால், அதுகுறித்து பின்னர் ஆலோசிக்கப்படும். அதேபோல் ஆன்லைன் ரம்மி மூலம் தமிழ்நாடு அரசுக்கு எந்த வருவாயும் வரவில்லை. ஆன்லைன் சூதாட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் ஆளுநரை சந்தித்ததாக தகவல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications