பெயரை மாற்றுவதுதான் தப்பிக்க ஒரே வழி.. செந்தில் பாலாஜி ஜாதகம் சொல்வது என்ன.. அன்றே கணித்த ஜோதிடர்
சென்னை: அமலாக்கத்துறையினரின் பிடியில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இது போன்ற பாதிப்பு ஏற்படும் என்று கடந்த 2021ஆம் ஆண்டே ஜோதிடர்கள் கணித்துள்ளனர். முருகன்,திருமால் பெயரை கொண்டவர்கள் வாயால் கெடுவார்கள் என்றும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன் என்பவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வி.செந்தில் குமாராக இருந்தவர் தனது பெயரை செந்தில் பாலாஜி என்று மாற்றிக்கொண்டதே ஜோதிடர் சொன்னதைக் கேட்டுதானாம். அந்த அளவிற்கு ஜோதிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். தனது பெயரை மாற்றிய பிறகுதான் அவரது அரசியல் வாழ்க்கையில் அடுத்தடுத்த உயர்வுக்கு சென்றவர். சாதாரண வார்டு கவுன்சிலாக இருந்து எம்எல்ஏ, அமைச்சராக உயர்ந்தவர் செந்தில் பாலாஜி.

திமுக, அதிமுக, அமமுக, திமுக என கட்சிகள் மாறினாலும் பதவி மட்டும் இவரை விட்டு போகாமலேயே இருந்தது. தனது அதிரடி செயல்பாடுகளால் ஜெயலலிதா, டிடிவி தினகரன், மு.க ஸ்டாலின் என கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் செல்லப்பிள்ளையாக குட்புக்கில் இடம் பிடித்து விடுவார்.
செந்தில் பாலாஜி, பரணி நட்சத்திரம், மேஷ ராசியில் பிறந்தவர். கரூர், தான்தோன்றி மலை பெருமாள் தான், செந்தில் பாலாஜியின் குலதெய்வம். அந்த கோவில் மட்டுமல்ல; தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களுக்கும் போய் வரும் செந்தில் பாலாஜி, ஒரு நாள், பெருமாள் கோவில் ஒன்றில் இருந்த ஜோதிடர்தான் செந்தில் குமாராக இருந்தவரை, செந்தில் பாலாஜி என, பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னாராம்.
திறமை, தகுதியை விட, ஜாதகம் ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட செந்தில் குமார், உடனடியாக தன் பெயரை செந்தில் பாலாஜி என, மாற்றியுள்ளார். ஜோதிடரின் வாக்கு பலித்து, அமைச்சரானார். கடந்த 2015ஆம் ஆண்டு அஷ்டமத்து சனி நடந்த போது ஊழல் புகாரில் சிக்கி அமைச்சர் பதவியை பறி கொடுத்தார். அதன் பிறகு சில ஆண்டுகள் அதிமுகவில் செயல்பட முடியாத நிலையில் இருந்தார்.
2016ஆம் ஆண்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றாலும் அமைச்சராக முடியவில்லை. டிடிவி தினகரனுடன் இணைந்து தனது எம்எல்ஏ பதவியை பறிகொடுத்தார். 2018ஆம் ஆண்டு டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் திமுகவில் இணைந்தார். கட்சிப்பதவி கரூர் மாவட்ட செயலாளர் பதவி தேடி வந்தது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவானார். திமுக ஆட்சியில் ஸ்டாலின் அமைச்சரவையில் பவர்புல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜியின் ஜாதகப்படி அவருக்கு ஜென்ம குரு ஜென்ம ராகு கோச்சாரத்தில் நடைபெறுகிறது. லாப ஸ்தானத்தில் சனிபகவான் பயணம் செய்கிறார். இன்னும் சில நாட்களில் சனிபகவான் வக்ரமடைகிறார். ஜென்ம குரு வனத்தினிலே என்று சொல்வார்கள். அதே நேரத்தில் சனி பகவானின் பார்வையும் மேஷ ராசியின் மீது விழுகிறது. செந்தில் பாலாஜி என்ற பெயருடையவர்கள் வாயால் கெடுவார்கள் என்று கடந்த 2021ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மணிகண்டன் பாரதிதாசன் என்ற ஜோதிடர் தனது முகநூல் பதிவில், முருகனின் பெயரையும் திருமாலின் பெயரையும் இணைத்துக்கொண்டவர்கள் பெரும்பாலும் தன் வாயாலேயே கெடுவார்கள். பேச்சைக்குறைப்பது நல்லது. சர்ச்சைக்கு பெயர்போனவர்கள் இவர்கள். செந்தில் பாலாஜி, பாலாஜி செந்தில்,முருக பாலாஜி, பாலாஜி முருகன் போன்ற பெயர் கொண்டவர்கள் அமைதி காப்பது நல்லது இதற்கு பரிகாரம் பெயரை மாற்றுவதுதான் என்றும் ஜோதிடர் தனது பெயரில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications