"ஜோதிட சாஸ்திரப்படி இந்த வருடம் கடினம் தான்.." துருக்கி நிலநடுக்கம் குறித்து காயத்ரி ரகுராம் ட்விட்
ஜோதிட சாஸ்திரப்படி இந்த வருடம் கடினமாக இருக்கும் என்று துருக்கி நிலநடுக்கம் குறித்து காயத்ரி ரகுராம் ட்விட் பதிவு வெளியிட்டுள்ளார்.
சென்னை: துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 1,300-க்கும் அதிகமானோர் பலியானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜோதிட சாஸ்திரப்படி இந்த வருடம் கடினமாக இருக்கும் என்றும் நல்ல எண்ணங்களாலும், நல்ல செயல்களாலும் உலகை குணப்படுத்துவோம் என்றும் காயத்ரி ரகுராம் ட்விட் பதிவு வெளியிட்டுள்ளார்.
துருக்கியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.
துருக்கியின் காசியோன்டேப் நகரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிரியா எல்லையை ஒட்டி அமைந்து இருக்கும் நகரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இரு நாட்டிலும் பாதிப்புகள் கடுமையாக ஏற்பட்டது.

அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்
நிலநடுக்கத்தின் அதிர்வலைகள் லெபனான், சிரியா, ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது. அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் அங்கே அதிகாலையில் ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வெளியேறுவதற்கு முன் அவர்கள் மீது கட்டிடங்கள் விழுந்துள்ளன. அதிகாலை 5 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தூங்கி கொண்டு இருந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் நிலநடுக்க இடிபாடுகளில் மக்கள் பலரும் சிக்கிக் கொண்டனர்.

இத்தாலியில் சுனாமி எச்சரிக்கை
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 1,800 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நிலநடுக்கத்தால் சீட்டுக்கட்டுகள் போல கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனால், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கினர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை இன்னும் கூட அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ஐரோப்பிய நாடான இத்தாலியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

துருக்கியில் கடும் பாதிப்பு
மீட்பு பணிகள் முடிவடைய பல மணி நேரம் பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது. சர்வதேச நாடுகளும் துருக்கிக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. இந்தியாவும் இந்த துயரமான தருணத்தில் துருக்கிக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. நிலநடுக்கத்தால் துருக்கியில் கடும் பாதிப்பு ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட்டதால் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களிலும் பலரும் இது தொடர்பாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வருடம் கடினமாக இருக்கும்
இந்த நிலையில், பாஜக முன்னாள் நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுமராம் துருக்கி நிலநடுக்கம் தொடர்பாக தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது: , ''துருக்கி நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் சரிந்தன. பல உயிர்கள் பலியாகின. ஜோதிட சாஸ்திரப்படி இந்த வருடம் கடினமாக இருக்கும். நல்ல எண்ணங்களாலும், நல்ல செயல்களாலும் உலகை குணப்படுத்துவோம். துருக்கிக்காக எனது பிரார்த்தனைகள்'' என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications