அசுரர்கள் களையெடுப்பு.. தமிழ்நாட்டில் "டார்கெட் 25".. அழுத்தி சொன்ன அண்ணாமலை! டெல்லி பாஜக வைத்த குறி
சென்னை: தமிழ்நாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக இப்போதே தயாராக தொடங்கிவிட்டது. டெல்லி பாஜகவின் முழு ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டில் பாஜக நிர்வாகிகள் பல்வேறு வியூகங்களை ஏற்கனவே வகுக்க தொடங்கி உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பாஜக தனியாக எதிர்கொண்டது. அதிமுக கூட்டணியில் இடம்பெறாமல் பாஜக தனித்து போட்டியிட்டது.
ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மட்டுமே கூட்டணி முறிந்து உள்ளதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றே பாஜக தலைகள் தெரிவித்து வருகின்றனர். இப்போதைக்கு பாஜக தனித்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்காது என்றே கருதப்படுகிறது

அண்ணாமலை
கடந்த நாடளுமன்ற தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் 1 இடத்தில் கூட வெல்லவில்லை. சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 4 இடங்களை பாஜக பிடித்தது. இந்த நிலையில்தான் 2024 நாடளுமன்ற தேர்தலுக்கு தமிழ்நாட்டில் பாஜக 25 இடங்களை குறி வைத்துள்ளது. 39 இடங்களிலும் 25 எம்பி பதவிகளை பெற வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இதன் மூலம் அமைச்சர் பதவிகளையும் அக்கட்சி கைப்பற்றும் திட்டத்தில் இருக்கிறதாம்.

பாஜக பிளான்
தமிழ்நாட்டிற்கு கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அமைச்சர்கள் பெரிதாக இல்லை. இப்போதும் எல் முருகன் இணை அமைச்சராக மட்டுமே இருக்கிறார். இதனால் தமிழ்நாட்டில் இருந்து பாஜக அமைச்சர்கள் டெல்லிக்கு சென்றால்.. அது வரும் காலங்களில் பாஜக வளர உதவியாக இருக்கும். தமிழ்நாட்டில் பாஜக அமைச்சர்கள் இருந்தால்.. அடுத்த சட்டசபை தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் புதிய உயரம் தொட வசதியாக இருக்கும்.

அண்ணாமலை பேட்டி
இதனால் தமிழ்நாட்டில் 25 இடங்களை பிடித்து அமைச்சர் பதவியையும் பெறும் திட்டத்தில் அண்ணாமலை இருக்கிறாராம். இது தொடர்பாக பேசிய அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து 25 பாஜக எம்.பிக்கள் வெற்றி பெறுவார்கள். அப்படி நடந்தால் 5 பேர் மத்திய அமைச்சராவது தமிழ்நாட்டிற்கு உறுதியாக கிடைப்பார்கள். அப்படி நடந்தால் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான நலத்திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டுவர முடியும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அசுரர் தோல்வி
இது மட்டுமின்றி அசுரர்களுக்கு எதிரான யுத்தம் தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் கேரளாவிலும் அசுரர்கள் களையெடுப்பு நடக்கும். அதிவிரைவில் ஆட்சி அகற்றப்படும். நாம் தயார் நிலையில் இருக்கும்போது ஆண்டவன் கட்டளையிடுவான். அதே நேரத்தில் நம்முடைய ஆட்சி இங்கும் கேரளாவிலும் அமையும் என்று அண்ணாமலை குறிப்பிட்டு பேசினார். இந்த நிலையில்தான் டெல்லி பாஜகவின் முழு ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டில் பாஜக நிர்வாகிகள் பல்வேறு வியூகங்களை ஏற்கனவே வகுக்க தொடங்கி உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
Recommended Video

தமிழ்நாடு பாஜக
அதன் ஒரு கட்டமாக விரைவில் தமிழ்நாட்டில் பாஜக நிர்வாகிகள் மாற்றம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியாக செயல்படாத நிர்வாகிகளை மாற்றும் வகையிலும், புதிய நிர்வாகிகளை நியமிக்கும் வகையிலும் அண்ணாமலை லிஸ்ட் ஒன்றை டெல்லிக்கு அனுப்ப போவதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு.. அதன்பின் தேர்தல் பணிகளை தமிழ்நாட்டில் பாஜக தொடங்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications