சென்னையில் 35 வருடங்களில் இல்லாத அளவு கடும் தண்ணீர் பஞ்சம்.. போர்வெல் ஊழியர்கள் வேதனை
சென்னை: சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதால், மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சென்னை நகரின் முக்கிய குடி நீர் ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளை தொடர்ந்து தற்போது புழல் ஏரியும் வறண்டு விட்டது.
புழல் ஏரியிலிருந்து தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி விநியோகிக்கும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இனி தண்ணீர் பஞ்சம் மேலும் மிக அதிகமாகும் என அஞ்சப்படுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க சென்னை நகரில், நிலத்தடி நீர் மட்டமே அதலபாதளத்திற்கு சென்று விட்டது. தண்ணீருக்காக தினந்தோறும் அல்லல் படும் மக்கள், அரசு தான் தங்களுக்கு நல்லதொரு தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீர் பஞ்சம் பற்றி கவலை தெரிவித்துள்ள மயிலாப்பூர் மக்கள், தற்போதைய சூழலில் 150 அல்லது 200 அடிக்கும் மேல் இன்னும் நிலத்தடி நீருக்காக போர்வெல்லை ஆழப்படுத்தினால், உப்பு கலந்த கடல் நீர் வந்து விடுமோ என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.
90 அடி வரை போர் போட்டால் கூட தண்ணீர் வரவில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர். முன்னர் 60 அடிகளுக்குள் போடப்பட்டிருந்த போர்களிலும் தற்போது தண்ணீர் சுத்தமாக வரவில்லை என கூறியுள்ளனர். மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட கடற்கரையோரம் உள்ள பகுதிகளில், 60 அடிக்கே கடல் நீர் உள்புகுந்து விட்டதாக போர்வெல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதை விட இன்னும் மோசமாக சென்னை நகரின் உட்பகுதிகளில் 400 அடிக்கு போர்வெல் அமைத்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை என்று கூறியுள்ளனர் அந்த ஊழியர்கள். இது பற்றி மேலும் தகவல் தெரிவித்துள்ள போர் வெல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், முன்பெல்லாம் மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 20 முதல் 30 அடிக்கெல்லாம் தண்ணீர் கிடைக்கும்.
ஆனால் தற்போதோ 90 முதல் 100 அடிக்கு மேல் சென்றால் தான் தண்ணீர் கிடைக்கிறது. தாங்கள் மூன்று முதல் நான்கு நாட்கள் கஷ்டப்பட்டு போர்வெல் பணியில் ஈடுபடும் போது, அங்கு தண்ணீர் கிடைத்தால் மட்டுமே நாங்கள் மகிழ்வோம். இல்லையென்றால் மக்களை போல எங்களுக்கும் வேதனையாக தான் இருக்கும் என கூறினர்.
கடந்த 35 வருடங்களில் இது போன்றதொரு தண்ணீர் பற்றாக்குறையை பார்த்ததில்லை. எனவே எங்களுக்கும் மிகுந்த மனவேதனையாக தான் உள்ளது என போர்வெல் ஊழியர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் சென்னை வறண்ட நகரமாக மாறி வரும் நிலையில், 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் கேன்களின் விலை ரூ.40-ஐ தாண்டியுள்ளது. இரண்டாயிரம் முதல் மூன்றாயிரம் லிட்டர் வரை லாரிகளில் பெரும் கொள்முதல் செய்யப்படும் நீருக்கும், கடும் தட்டுப்பாடு நிலவுவதால் அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் நீரின்றி காய்ந்து வருகின்றன.