ஆவடி அருகே இரட்டை கொலைக்கும் கிருஷ்ணா நகைக் கடை கொள்ளையர்களுக்கும் தொடர்பா? போலீஸார் விளக்கம்
சென்னை: சென்னை ஆவடியில் சித்த மருத்துவர் மற்றும் அவருடைய மனைவி கொலை வழக்கில் கிருஷ்ணா நகைக் கடை கொள்ளையர்களுக்கு தொடர்பு உண்டா என்பது குறித்து போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், மிட்டனமல்லி பகுதியை சேர்ந்தவர் சிவன் நாயர். இவருடைய மனைவி பிரசன்ன குமாரி. இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். சிவன் நாயர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். பிரசன்ன குமாரி, மத்திய அரசின் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் வீட்டிலேயே சித்த மருத்துவம் பார்த்து வந்தார் சிவன் நாயர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் ஹரி ஓம் அன்னூரில் சித்த மருத்துவ கிளீனிக் வைத்துள்ளார். மகள் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை மகன் ஹரி ஓம் வெளியே சென்றாராம்.
அப்போது சிலர் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக வந்தவர்கள் போல் வந்தனர். அவர்கள் இருவரும் சிவன் நாயரையும் பிரசன்ன குமாரியையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீஸார் இருவருடைய உடலையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு முதலே அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இதனிடையே ஆவடியில் கிருஷ்ணா ஜுவல்லர்ஸ் என்ற நகைக் கடையில் கடந்த 15 ஆம் தேதி ரூ 1.15 கோடி தங்க நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தனிப்படை போலீஸார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இவர்கள் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டனவா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை சவுகார்பேட்டையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தினேஷ் குமார், சேத்தன் குமார் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவருக்கும் ஆவடி இரட்டை கொலையில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் கூறுகையில் அப்படியெல்லாம் இல்லை என தெரிவித்துள்ளார். இரட்டை கொலைக்கும் இந்த இரு நபர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications