ஏவிஎம் சரவணன் கெட்ட வார்த்தையே பேசியதில்லை! கோபம் வந்தால் அவர் யூஸ் செய்த வார்த்தை என்ன தெரியுமா?
சென்னை: ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரும் சினிமா தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணனுக்கு கோபமே வராதாம். அப்படியே வந்தாலும் அவர் திட்டும் ஒரு வார்த்தை என்ன தெரியுமா? மேலும் தன் வாழ்நாளில் ஒரு முறை கூட கெட்ட வார்த்தையே பேசியது கிடையாதாம்.

திரைப்படத் தயாரிப்பாளரும், ஏவிஎம் நிறுவனத்தின் தலைவருமான ஏவிஎம் சரவணன், தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கடந்த இரு ஆண்டுகளாக நடக்க முடியாமல் ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள வீட்டில் இருந்த சரவணன், இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86.
தற்போது ஏவிஎம் ஸ்டூடியோவில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது உடல் இன்று மாலை 3 மணிக்கு மேல் ஏவிஎம் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. சரவணனின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
சரவணன் மறைவு
சரவணனின் மறைவுக்கு நடிகர்கள் சிவகுமாரும் சூர்யாவும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், சரவணனின் இயற்பெயர் சரவணன் சூர்யா மணி. எனக்கு அவர் மீது இருந்த பிரியத்தின் காரணமாக என் மூத்த மகனுக்கு சூர்யா என பெயரிட்டேன் என்றார்.
ரஜினிகாந்த் அஞ்சலி
அது போல் ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அவர் கூறுகையில், மிகப்பெரிய மனிதர். ஜென்டில்மேன் என்பதற்கு எடுத்துகாட்டு சரவணன் சார். எப்போதும் வெள்ளை உடைதான் அணிவார். அவருடைய உள்ளமும் அப்படித்தான் இருக்கும். சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தார். 10 நிமிடம் பேசினால்கூட அதில் 10 முறை 'அப்புச்சி... அப்புச்சி...' என தன் அப்பாவை நினைவுப்படுத்துவார். என் மீது அதிக அன்பு வைத்தவர். என் நலன் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்குத் துணையாக நின்றவர்.
9 படங்கள் வெற்றி
ஏவிஎம் தயாரிப்பில் 9 படங்கள் நடித்திருக்கிறேன். அதில் எல்லா படங்களும் மாபெரும் வெற்றிப் படங்கள். அதற்கு முக்கியக் காரணம் சரவணன் சார்தான். 80-களில் தமிழில் மிக பிரம்மாண்ட செலவில் எடுக்கப்பட்ட படம் முரட்டுக்காளை. 2000-களில் சிவாஜி.
2020 களில் படம் எடுக்க முயற்சி
2020-களில் ஒரு படம் எடுக்கலாம் எனப் பேசிக்கொண்டிருந்தோம். அது நடக்கவே இல்லை. அவருடைய மறைவு மிகவும் மனதை பாதிக்கிறது. அவர் ஆன்மா சாந்தி அடையட்டும். அவரின் குடும்பத்தாருக்கு என் இரங்கல்கள். எனது நலம் விரும்பி என ரஜினி தெரிவித்தார்.
கை கட்டி அடக்கம்
ஏவிஎம் சரவணன், அந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த போதிலும் எல்லாரிடமும் பணிவுடன் இருந்தார். கோபமே படமாட்டாராம். எப்போது கைகளை கட்டிக் கொண்டு அடக்கமாக இருந்த பழக்கத்தை தனது பள்ளி காலத்தில் இருந்தே அவர் பின்பற்றி வந்தார்.
கோபம் வராது
இதுவரை ஒரு கெட்ட வார்த்தை கூட பேசியதில்லை என்றும் அப்படியே கோபம் வந்தாலும் "மடச் சாம்பிராணி" என்று மட்டுமே தான் திட்டியதாக அவர் ஒரு பேட்டியில் கூட தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications