நிலம் வாங்குவோர் கவனத்திற்கு.. பட்டாவில் சென்ட் செக் பண்ணலனா மொத்த காசும் காலி! TamilNadu Land Alert
சென்னை: தமிழகத்தில் நிலம் வைத்திருப்பவர்கள், புதுசா புதிதாக நிலம் வாங்கத் திட்டமிடுபவர்கள், தங்களுடைய நிலத்தின் உரிமையை உறுதிப்படுத்த பட்டா மற்றும் சிட்டா ஆவணங்களை சரிபார்ப்பது மிக முக்கியம்.. குறிப்பாக 100 சதவீதம் துல்லியமாக சென்ட் (Cent) அடிப்படையில் உங்கள் நில விவரங்களைச் செல்போன் மூலமாகவே சில நிமிடங்களில் பார்த்துவிட முடியும்.. இதற்காக நீங்கள் அலைய தேவையில்லை.. எப்படி தெரியுமா?
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வெப்சைட் eservices.tn.gov.in மூலம் பொதுமக்கள் தங்களின் நில விவரங்களை எப்போது வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்ளலாம்..

முதலில் இந்த இணையதளத்திற்கு சென்று "பட்டா & புலவரைபடம்/சிட்டா விவரங்களைப் பார்வையி"' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.. அங்கு உங்கள் நிலம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் அது கிராமப்புறமா அல்லது நகர்ப்புறமா என்பதைத் தேர்வு செய்வது அவசியம்.
பட்டா, சிட்டா
அதன் பிறகு வட்டம் மற்றும் குறிப்பிட்ட கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, நிலத்தின் சர்வே எண் அல்லது பட்டா எண்ணை உள்ளிட வேண்டும்.. நிலத்தின் சர்வே எண் (Survey Number) மற்றும் உட்பிரிவு எண் (Sub-division Number) இருந்தால் மட்டுமே துல்லியமான விவரங்களைப் பெற முடியும்..
பட்டா என்பது நிலத்தின் உரிமையைக் குறிக்கும் ஒரு சட்டப்பூர்வ ஆவணம் ஆகும்.. சிட்டா என்பது அந்த நிலத்தின் பரப்பளவு, வகைப்பாடு மற்றும் உரிமையாளர் விவரங்களைக் கொண்ட வருவாய்த் துறைப் பதிவேடு ஆகும்..
ஆன்லைனில் நீங்கள் சிட்டாவைப் பதிவிறக்கம் செய்யும்போது, அதில் நிலத்தின் பரப்பளவு பெரும்பாலும் ஹெக்டேர் மற்றும் ஏர்ஸ் கணக்கிலேயே இருக்கும்.. இதைச் சென்ட் கணக்கிற்கு மாற்றுவது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.. பலசமயங்களில், நிலம் வாங்கும்போது 5 சென்ட் என்று சொன்னாலும், ஆவணத்தில் வேறு அளவீடுகள் இருக்கலாம்.. இதை சரிபார்க்கவே இந்த ஆன்லைன் வசதி வழங்கப்பட்டுள்ளது.. இந்தத் தகவலை தெரிந்து கொள்வது ஒவ்வொரு நில உரிமையாளரின் கடமையாகும்..
சென்ட் கணக்கீடு எப்படி?
சாதாரண மக்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், ஒரு ஏர் என்பது தோராயமாக 2.47 சென்ட் ஆகும்.. உங்கள் சிட்டாவில் உள்ள ஏர்ஸ் (Ares) அளவை 2.47 ஆல் பெருக்கினால், உங்கள் நிலம் மொத்தம் எத்தனை சென்ட் என்பது துல்லியமாகத் தெரிந்துவிடும்..
இந்த எளிய கணக்கீடு மூலம் புரோக்கர்களிடம் ஏமாறாமல் உங்கள் நிலத்தின் பரப்பளவை நீங்களே உறுதி செய்து கொள்ளலாம்.. உதாரணமாக, 10 ஏர்ஸ் நிலம் இருந்தால் அது 24.7 சென்ட் ஆகும்.. இந்த கணக்கீட்டைத் தவறாமல் செய்வது நிலம் வாங்கும் போது பண இழப்பை தவிர்க்க உதவும்.. அரசு ஆவணங்களில் உள்ள மெட்ரிக் அளவீடுகளைப் புரிந்து கொள்வது இப்போது மிக எளிது..
நிலத்தின் பரப்பளவை சரிபார்ப்பது போலவே, நிலத்தின் வகையைச் சரிபார்ப்பதும் முக்கியம்.. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்பதைப் பொறுத்தே அந்த நிலத்தில் நாம் என்ன செய்ய முடியும் என்பது முடிவாகும்.. அரசு புறம்போக்கு நிலங்கள் சில நேரங்களில் தனி நபர் பெயரில் இருப்பது போலத் தோன்றும்,
ஆனால் ஆன்லைன் சிட்டாவில் "அரசு புறம்போக்கு" என்று தெளிவாகக் காட்டிவிடும்.. இதனால் பெரும் பண இழப்பிலிருந்து தப்பிக்க முடியும்.. உங்கள் நிலத்தின் தன்மையைச் சரியாகத் தெரிந்து கொள்வது எதிர்காலப் பயன்பாட்டிற்கு மிகவும் உதவும்..
நில அளவீடுகள்
இன்றைய காலக்கட்டத்தில் நில மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அவ்வப்போது தங்கள் பட்டா சிட்டாவை ஆன்லைனில் சரிபார்ப்பது ஒரு தற்காப்பு நடவடிக்கையாகும்.. அரசு நில அளவீடுகளில் கொண்டு வந்துள்ள இந்த அதிரடி மாற்றங்கள் மற்றும் டிஜிட்டல் வசதிகள் மூலம், லஞ்சம் இன்றி மக்கள் தங்கள் நில ஆவணங்களைச் சரிபார்க்க முடிகிறது.
அதுமட்டுமல்ல, நில வரைபடமான எப்.எம்.பி (FMB) ஆவணத்தையும் இதிலேயே பதிவிறக்கம் செய்து எல்லைகளைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.. சர்வே எண்ணை வைத்து உங்கள் நிலத்தின் வடிவம் எப்படி இருக்கும் என்பதையும் மேப் மூலம் பார்க்க முடியும்.. இதன் மூலம் பக்கத்து நிலத்துக்காரர்களுடன் ஏற்படும் எல்லைத் தகராறுகளை தவிர்க்கலாம்..
நிலம் வாங்குவதற்கு முன்பும், வாங்கிய பின்பும் பட்டா மாறுதல் சரியாக நடந்துள்ளதா என்பதைச் சரிபார்க்க இந்த ஆன்லைன் முறை ஒரு சிறந்த பாதுகாப்புக் கவசம்.. பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்த பிறகு அதன் தற்போதைய நிலை (Application Status) என்ன என்பதையும் இந்த வெப்சைட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம்..
நிலப்பரிமாற்றம்
உங்கள் நிலத்தின் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் இருந்தால் போதும், உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் சொத்து விவரங்களை விரல் நுனியில் பார்த்துவிடலாம்..
மொத்தத்தில் ஆன்லைனில் பெறப்படும் இந்த ஆவணங்கள் சட்டப்பூர்வமானவை என்றாலும், பெரிய அளவிலான நிலப் பரிமாற்றங்களின் போது இ-சேவை மையங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட நகல்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது..
அரசு இந்த சேவையை 24 மணி நேரமும் இலவசமாக வழங்கி வருவது பாமர மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.. இதன் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு இன்றி ஒவ்வொரு குடிமகனும் தன் நிலத்தின் உரிமையை உறுதி செய்து கொள்ள முடியும்....!!!












Click it and Unblock the Notifications