Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்.. புனித தீர்த்த யாத்திரை பயணம் .. துவக்கி வைக்கும் சேகர் ரெட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக ராமாமிர்த தரங்கினி அறக்கட்டளையானது சிருங்கேரி மடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமி ஆசியுடன் அகில பாரத தேச தீர்த்த யாத்திரை தமிழகத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்க உள்ளது. 16 புண்ணிய நதிகளின் தீர்த்தங்களுடன் ராமபிரான் பாதுகா, திரு உருவ சிலையுடன் அமைக்கப்பட்ட புனித பெட்டகம் சிறப்பு ரத பயணத்தை திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு, புதுச்சேரி ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி துவக்கி வைக்க உள்ளார்.

அயோத்தி ராமர் கோவில்: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதனை அடுத்து ராமர் கோயில் கட்டுவதற்கு ராமஜென்ம பூமி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, அதன் பிறகு கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்காக பொதுமக்கள், தொழிலதிபர்கள் என பலரும் தங்களால் முடிந்த நிதியுதவியையும் அளித்து வருகின்றனர்.

Ayodhya Ram Temple Kumbabhishekam on 14 January 2023 J Sekhar Reddy Inaugurating Holy Tirtha Yatra

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ரூபாய் 1800 கோடி மதிப்பீட்டில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உழைப்பில் இந்த பிரம்மாண்ட கோயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் 2024 ஜனவரியில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது.

மகர சங்கராந்தி: பொதுவாக கும்பாபிஷேகத்திற்கு புனித நதிகளில் இருந்தும், ஆறுகளில் இருந்தும் புனித நீர் குடங்கள் புறப்பாடு நடைபெறும். இந்த புனித நீர் கொண்டு ஒவ்வொரு கோவிலிலும் கும்பாபிஷேக நாள் அன்று கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தி வைக்கப்படும். ஸ்ரீ பால இராமர் திருமேனி வருகிற ஜனவரி 14, 2024 மகர சங்கராந்தி அன்று திருக்கோயிலின் கருவறையில் ப்ரதிஷ்ட்டை செய்யப் படும் என்றும் இந்த ஆண்டு ஜனவரியில் தெரிவித்திருந்தார்.

பிரம்மாண்ட கோவில்: 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும் 235 அடி அகலமும், தரையில் இருந்து 16.5 அடி உயரமும் கொண்ட இத் திருக்கோயில் ஐந்து குவி மாடங்கள் ,மூன்று தளங்களுடன் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் உடையதாக , அமைக்கப் பட்டுள்ளது . தரை தளத்தில் 160 தூண்களும் , முதல் தளத்தில் 132 தூண்களும் , இரண்டாவது தளத்தில் 74 தூண்களும்,அமைக்கப் படுகின்றன .12 நுழைவு வாயில்கள் உடைய இக்கோயிலின் திருக்கோபுரம் 161 அடியாகும்.

பிரம்மாண்ட கோவில்: புயல் மழை வெள்ளம் நிலநடுக்கம் போன்ற இயற்கை பாதிப்புக்களில் இருந்து திருக்கோயிலைப் பாதுகாக்கும் விதமாக கோயிலைச் சுற்றி மூன்று அடுக்குகளில் மரம் வளர்ப்பு மற்றும் நந்தவனம் வளர்ப்பு முறைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்திய விடுதலைக்குப் பின் இந்தியாவில் கட்டப் படும் மிகப் பிரம்மாண்டமான முதல் திருக்கோயில் இதுதான்.

அயோத்தி அறக்கட்டளை: இந்தக் கோயிலின் கட்டுமானத்திற்குத் திட்டமதிப்பு ரூபாய் 1700 கோடி வரை முடிவு செய்திருந்த போதிலும் ஸ்ரீ இராம பக்தர்களின் காணிக்கையாக மட்டும் 3400 கோடிகளுக்கு மேல் பொருள் உதவி கிடைத்துள்ளது. கட்டுமான செலவு போக மீதமிருக்கும் பணத்தை அயோத்தியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப் படும்கோயில் அறக்கட்டளையினர் சார்பில் கூறப்பட்டுள்ளது.

பால ராமர்: 2022 ஜூன் மாதம் 1ம் தேதி உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த குழந்தை இராமர் கோயிலின் கருவறை கட்ட அடிக்கல் நாட்டினார். குழந்தை இராமர் கோயிலுக்கான கருவறை பீடம் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வந்த கிரானைட் கற்களால் அமைக்கப் பட்டுள்ளது . கீழ்தளத்தில் உள்ள இந்த கருவறையில் தான் மூலவர் ஸ்ரீ இராமர் பிரதிஷ்டை செய்யப் பட இருக்கிறது .

புனித தீர்த்தம்: மூலவரை இராம் லல்லா என்கிறார்கள். இராம் லல்லா என்றால் குழந்தை இராமர் அல்லது பால இராமர் எனப்பொருள் படும் . இந்த இராம ஜென்மபூமியில் உள்ள இக்கோயிலின் மூலவர் குழந்தை இராமர் ஆவார். மகரசங்கராந்தி நாளில் நடைபெற உள்ள ஸ்ரீ இராமர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் .இது சமயம் பல்வேறு நாடுகளில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டு ஸ்ரீ இராமருக்கு அபிஷேகம் நடைபெற இருக்கிறது.

அயோத்தியில் கொண்டாட்டம்: உத்திரப் பிரதேசம் அயோத்தி மாவட்டம் அயோத்தியில் நடைபெறும் இந்த மகத்தான விழாவில் கலந்து கொள்வதற்கு இப்போதே பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்துக்கள் ஆயுத்தமாகி வருகிறார்கள். 2024ம் ஆண்டு சித்திரை மாதம் ராமநவமியின் முதல் நாளில் ராமபிரானின் பிறந்தநாள் கொண்டாடப்படும். அன்று சரியாக 12 மணிக்கு, சூரிய கதிர்கள் ராம் லல்லா சிலையின் மீது சிறிது நேரம் விழும். அது இராம பக்தர்களுக்கு ஒரு தெய்வீக அனுபவமாக இருக்கும். அடுத்த ஆண்டு ஜனவரி 1 ம் தேதியில் இருந்து ஏப்ரல் 17ம் தேதி வரைக்கும் அயோத்தி ஸ்ரீ இராமர் திருக்கோயிலில் தொடர் திருவிழாக்கள் நடை பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித தீர்த்தங்கள் யாத்திரை: ராமாமிர்த தரங்கினி அறக்கட்டளையானது சிருங்கேரி மடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமி ஆசியுடன் அகில பாரத தேச தீர்த்த யாத்திரை தமிழகத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்க உள்ளது. பாரதத்தின் 16 புண்ணிய நதிகளின் தீர்த்தங்களுடன் ராமபிரான் பாதுகா, திரு உருவ சிலையுடன் அமைக்கப்பட்ட புனித பெட்டகம் சிறப்பு ரதத்தில் தன் பயணத்தை துவக்க உள்ளது.

சேகர் ரெட்டி: இந்த புனித பயணம் உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிஜி, உடுப்பி புத்திகே மடத்தின் மடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ சுகுனேந்திர தீர்த்த சுவாமி ஜி ஆகியோர் முன்னிலையில் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர நிறுவனர் மற்றும் அறங்காவலரும் முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான கே. பராசரன் ஆசியுடன் திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு, புதுச்சேரி ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி துவக்கி வைக்க உள்ளார்.

நாடு முழுவதும் பயணம்: இந்த பயணத்தின் புனித பெட்டகமானது நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு சென்று மக்கள் வழிபாடு செய்த பின்னர் கும்பாபிஷேகத்தின் போது அயோத்தி சென்றடைய உள்ளது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 90 நாட்களில் 108 இடங்களில் 108 நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 108 தெய்வீக தொடர் நிகழ்வின் தொடக்க விழா இன்று செவ்வாய்கிழமை நடைபெறுகிறது.

ஜெய் ஸ்ரீராம்: ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்பதற்காக, நாடு முழுக்க இருந்த பல்வேறு மொழிகளில் ஸ்ரீராம் என்று பெயர் செதுக்கப்பட்டுள்ள செங்கல்கள் கடந்த 30 வருடங்களாக அனுப்பப்பட்டு தொடர்ந்து வந்து சேர்ந்த இந்தச் செங்கல்கள் பூஜை செய்யப்பட்டு இராமர் கோயில் கட்டுமான பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது புனித பெட்டகமானது நாடு முழுவதும் பயணம் செய்யப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+