கழுத்தில் சிலுவை.. ஐயப்பன் பற்றி சர்ச்சையாக பாடிய இசைவாணி! புகாருக்கு நடுவே பாடகிக்கு போன மிரட்டல்
சென்னை: ‛ஐ எம் சாரி ஐயப்பா.. உள்ளே வந்தால் என்னப்பா’’ என ஐயப்பன் குறித்து இயக்குநர் பா ரஞ்சித்தின் இசை குழுவில் உள்ள கானா பாடகி இசைவாணி பாடிய பாடல் சர்ச்சையானது. இதுதொடர்பாக பா ரஞ்சித், இசைவாணி மீது நடவடிக்கை கோரி போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில் தனக்கு மிரட்டல் வருவதாகவும், பாதுகாப்பு கோரியும் இசைவாணி சார்பில் சென்னை காவல் ஆணையரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக பா ரஞ்சித் உள்ளார். இவர் நீலம் பண்பாட்டு மையத்தை தொடங்கி உள்ளார்.இந்த பண்பாட்டு மையத்தில் ‛கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்ற இசைக்குழு உள்ளது.

ஏழை, எளிய மக்கள், தலித் மக்களின் வலிகளை உணர்த்தும் பாடல்கள் இந்த இசைக்குழு சார்பில் பாடப்பட்டு வருகிறது. இந்த இசைக்குழுவில் கானா பாடல் பாடகள் உள்ளனர்.
அதில் ஒருவர் தான் கானா பாடகி இசைவாணி இடம்பெற்றுள்ளார். இவர் பிக்பாஸ் போட்டியிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் தான் இசைவாணி பாடிய பாடல் சர்ச்சையாகி உள்ளது. அதாவது தற்போது கார்த்திகை மாதம் நடக்கிறது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள ஐயப்பன் சுவாமிக்கு மாலை அணிவித்து விரதம் கடைப்பிடித்து கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் கானா பாடகி இசைவாணி பாடிய பாடல் ஒன்று இணையதளங்களில் பரவியது. அதில் இசைவாணி, ‛‛ஐ ஆம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா.." என்று தொடங்கும் பாடலை பாடுகிறார். நீலம் பண்பாட்டு மையம் சார்பில், ‛
மார்க்கழியில் மக்களிசை’ என்ற பெயரில் சமீபத்தில் நடந்து முடிந்த இசை நிகழ்ச்சியில் அவர் இந்த பாடலை பாடினார். தற்போது சபரிமலை சீசன் என்பதால் இந்த பாடல் சர்ச்சையாகி உள்ளது.
அதாவது ஐயப்பன் சுவாமி கோவிலுக்கு பெண்கள் செல்ல தடை உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் சர்ச்சையாகும் நிலையில் அவர் அதனை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் இந்த பாடல் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாகவும், ஐயப்ப விரதம் உட்பட பல விஷயங்களை அவதூறு செய்யும் நோக்கத்துடனும் வரிகள் இருப்பதாக கூறி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஐயப்பா பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் இந்த புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அப்போது இசைவாணி கழுத்தில் சிலுவை அணிந்துள்ளார். இயேசுவை புகழ்ந்து அவர் பாடல் பாடியுள்ளதோடு, மேடையில் தற்போது ஐயப்பனை இழிவுப்படுத்தும் வகையில் பாடல் பாடியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர். அதேபோல் பா ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளது.
இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் இசைவாணி சார்பில் சென்னை காவல்துறை ஆணையரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இசைவாணியின் செல்போனை தொடர்பு கொண்டு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து தான் இந்த பாதுகாப்பு மனு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications