பீமா பட்டா அவசியம்.. நிலத்தை வாங்குவோர்கள் தோராய பட்டாவின் முக்கியத்துவத்தை தவறாமல் தெரிஞ்சுக்கணும்
சென்னை: சொத்துக்களை வாங்குவோர் கட்டாயம் பெற்றிருக்க வேண்டிய ஆவணம் பட்டாவாகும்.. என்பது நில உடமை பதிவேடு அல்லது நில உடமை ஆவணத்தைதான் பட்டா என்பார்கள்.. அதாவது சொத்து யாருடைய பெயரில் உள்ளதோ அந்த நில உரிமையாளரின் பெயர், தகப்பனார் பெயர், நிலம் அமைந்துள்ள மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், நிலத்தின் வகை, வரித்தொகை, விஸ்தீரணம் போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும். அந்தவகையில் பட்டாவின் பயன்பாடுகள் என்னென்ன? தோராய பட்டா, பீமா பட்டா என்றால் என்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
ஒரு நிலம் வாங்கும்போதும், விற்கும்போதும் பட்டா ஆவணங்கள் ஏன் அவசியமாகின்றன தெரியுமா? பட்டா ஆவணம் இல்லாவிட்டால், எந்த பரிவர்த்தனையையும் சட்டப்பூர்வமாக பதிவு செய்ய முடியாது.

பட்டா பயன்கள்
ஒரு வங்கியில் கடன் பெற வேண்டுமானாலும்சரி, நிலத்தை ஈடாக வைக்க வேண்டுமானாலும் சரி பட்டா அவசியம்... பட்டா இல்லாமல் கடன் பெறுவது கடினம்.
அதேபோல, அரசு வழங்கும் நிலம் தொடர்பான திட்டங்களில் பயன்பெறுவதற்கும் பட்டா தேவையாக உள்ளது.. பட்டா ஆவணம் கையில் வைத்திருந்தால்தான், நிலத்தின் மீது வேறு ஒருவரின் உரிமை கோரலை சட்டப்படி எதிர்க்கலாம்.
பட்டாக்கள் வகைகள்
ஆனால், பட்டாக்களில் யூடிஆர் பட்டா (UDR Data Registry), தோராய பட்டா & தூய பட்டா, ஏடி கண்டிசன் பட்டா- AD Assignment Land(Adi Dravidar), ல ஒப்படை பட்டா (Assignment patta), டிஎஸ்எல்ஆர் பட்டா (TSLR PATTA = Town Survey Land Record), 2C பட்டா- மர பட்டா - தூசு பட்டா, கூட்டு பட்டா (joint patta), தனி பட்டா (Individual Patta) என்று பல வகைகள் உள்ளன.
இதில், தோராய பட்டா என்றால் என்ன என்பதை பார்ப்போம்.. அரசு ஒரு குறிப்பிட்ட இடத்தில் நத்தம் அளவை செய்து வைத்திருக்கும்.. கூடுதலாக ஏக்கர் கணக்கிலும் நத்தம் புறம்போக்குகளாக அரசாங்கம் அமைத்திருக்கும். இதில் நிலம் இல்லாதவர்களுக்கும் அல்லது அனுபவ முறையில், அங்கு ஏற்கனவே வசித்து வரும் மக்களுக்கும் அந்த இடத்தில் ஒவ்வொருவருக்கும் பட்டாவை ஒதுக்கி தரும். இதுவே தோராய பட்டா எனப்படும்.
நத்தம் நிலங்கள்
அதாவது, நத்தம் நிலத்தில் உள்ள ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே நம்பர்கள் தரப்பட்டு, நத்தம் நிலவரித்திட்ட பட்டாவாக வழங்கப்படுகிறது.. சாலைகள், குளங்கள் போன்ற பகுதிகளை உரிய முறையில் ஆவணப்படுத்தி, நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்த அந்த நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு அரசு பட்டா வழங்குவதன் மூலம் நிலம் வரி விதிப்புக்குள் கொண்டு வரப்படுகிறது.
மேற்கண்ட பட்டாவில் உள்ள பெயர்கள், அளவுகள் ஆகியவற்றில் திருத்தங்கள் கண்டறியப்பட்டு, அவை தெரிவிக்கப்படும் நிலையில் தக்க திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற அடிப்படையில்தான் இதற்கு தோராய பட்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. தோராயம் என்ற பெயரில் இது அழைக்கப்படுவதால், தற்காலிக பட்டாவாகவே கருதப்படுகிறது.
ஒருவேளை அதில் பிழைகள் இருந்தால், 45 நாட்களுக்குள் தாசில்தார் அலுவலகம் சென்று மாற்றிக்கொள்ளலாம்.. பிழைகளை திருத்துவதற்கு அவகாசமும் உண்டு. அந்த பிழைகளை திருத்தி, நிலத்தின் அளவு, வரைபடம் போன்றவை சரியாக இருந்தால், அதற்கு தூய பட்டா வழங்கப்படும்.. இது மிகவும் துல்லியமான நில அளவை செய்யப்பட்ட பட்டாவாகும்.. ஒரு பிழையும் இதில் இருக்காது..
நில ஒப்படைப்பு பட்டா , பீமா பட்டா என்றால் என்ன
முன்னாள் ராணுவத்தினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஏழை மக்களுக்கு, அரசு இலவச நிலம் ஒதுக்கீடு செய்வதற்கு நில ஒப்படைப்பு பட்டா என்பார்கள்.
ஒரு இடத்தில் அதிகமான வருடங்கள் இருந்தாலும், தவிர்க்க முடியாத காரணத்தினால், அந்த இடத்தினை கட்டாயம் காலி செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் வழங்கப்படும் நோட்டிஸ் பெயரே B Memo.. இதுதான் பின்னாளில் "பீமா பட்டா" என்றே வழக்கத்தில் வந்துவிட்டது.
B Memo பட்டா என்பது நில உரிமைக்கான பட்டாவே இல்லை. அரசின் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற மெமோ நோட்டீஸ் என்ற பெயரே B Memo பட்டாவாகும். இந்த மெமோ உள்ள நிலத்தை அரசு எப்போது வேண்டுமானாலும் காலி செய்ய இயலும்.












Click it and Unblock the Notifications