பக்ரீத் பண்டிகை.. காதர் மொகிதீன், சசிகலா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
சென்னை: பக்ரீத் கொண்டாட்டத்தையொட்டி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், சசிகலா உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Recommended Video
முஸ்லிம் மக்களின் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத்தும் ஒன்று. ஹஜ் பெருநாள் எனவும் பக்ரீத் அழைக்கப்படுகிறது. இறை தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி நாகை மாவட்டம் நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
பக்ரீத் பண்டிகை..தியாகத்திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட முதல்வர் ஸ்டாலின், அன்புமணி வாழ்த்து
பக்ரீத் சிறப்பு தொழுகை
இந்த தொழுகையில் புத்தாடை அணிந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தியாகத்திருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி, ஆரத்தழுவி பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின் திறந்தவெளி தொழுகை நடத்தி பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.
காதர் மொகிதீன் வாழ்த்து
இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கேஎம் காதர் மொகிதீன் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‛‛புனித ஹஜ் திருநாள் கொண்டாடும் உலக முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒற்றுமையுடனும், எல்லா மக்களுடன் நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கும் இறையருள் நிறையப் பிரார்த்திப்போம். இந்திய முஸ்லிம்கள் எல்லா சமுதாயங்களுடனும் அண்ணன் - தம்பி, உறவைப் பேணி, ஒரு தாய் மக்கள் என்ற உணர்வுடன் வாழ்வோம்; வளர்போம்; உயர்வோம்; உயர்த்துவோம்'' என குறிப்பிட்டுள்ளார்.
சசிகலா வாழ்த்து
இதேபோல் சசிகலாவும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா என்ற பெயரில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛தியாகத்திருநாளாம் பக்ரீத் பெருநாளை கொண்டாடும் அன்பிற்கினிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.
துரோகங்கள் அழியட்டும்
இறைத்தூதர் இப்ராஹிம் தியாகத்தை இவ்வுலகிற்கு உணர்த்தும் நாளாக கொண்டாடப்படும் இந்நன்னாளில் துரோகங்கள் அழிந்து, சகோதரத்துவமும், ஈகை குணமும் தழைத்தோங்கட்டும். தியாக சிந்தனைகள் மேலோங்கட்டும். இந்த தியாக திருநாளில் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் பெருகட்டும். வேற்றுமை நீங்கி ஒற்றுமை ஓங்கட்டும். அன்புள்ள இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கி கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.