ஓபிஎஸ், இபிஎஸ் மீதான புகழேந்தியின் அவதூறு வழக்கு! ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் பெங்களூர் புகழேந்தி. இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதுதொடர்பாக ஜூன் 14ஆம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது.
அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. இதற்கு பெங்களூர் புகழேந்தி எதிர்ப்பு தெரிவித்தார்.

அவதூறு வழக்கு
மேலும் அறிக்கையில் கூறப்பட்ட காரணங்கள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக புகழேந்தி கூறினார். அத்துடன் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரையும் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரியும் புகழேந்தி, சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஓபிஎஸ், இபிஎஸ் மனுத்தாக்கல்
இந்த வழக்கில் இருவரும் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சம்மன் ரத்து, அவதூறு வழக்கை ரத்து கோரிக்கைகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

முகாந்திரம் இல்லை என வாதம்
நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ. நடராஜன் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அவர்கள் தரப்பில் தவறு செய்த ஒருவர் நீக்கப்பட்டது குறித்து உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டியது கடமை என்ற அடிப்படையில் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், அவதூறுக்கு முகாந்திரம் இல்லை என வாதிடப்பட்டது. கட்சியின் விதிகளை பின்பற்றாத உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கட்சியில் இருந்து நீக்கவும் தலைமைக்கு முழு அதிகாரம் உள்ளதெனவும் வாதிடப்பட்டது.

அவதூறு வழக்கு ரத்து
புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்ஜிஆர் பிரசாத் ஆஜரானார். அவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை எனவும்,
பதில் அளிக்க வாய்ப்பு வழங்கப்படாமல், காரணமின்றி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி நிர்மல்குமார் கட்சியிலிருந்து நீக்கிய அறிவிப்பில் அவதூறு பரப்பும் வகையில் ஏதும் இடம்பெறவில்லை என்பதால், அதன் அடிப்படையில் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் பெங்களூர் புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications